புதுடெல்லி,
உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ந்தேதி சிறப்பாக தொடங்கியது. கங்கை மற்றும் யமுனை ஆகிய இரு ஆறுகள் சங்கமிக்கும் புனித பகுதியில் முதல் நாளில் 1 கோடி பேர் நீராடினர் இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி வரும் 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு நடைபெறும்.
இந்தியாவின் பழமையான கலாசாரம் மற்றும் மத பாரம்பரியங்களை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றும் பெருமை மிக்க மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் 45 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்க கூடும் என்று என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 34.97 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீடாரடியுள்ளனர்.
இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகருக்கு நாளை வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகிறார். இந்தப் பயணத்தின் போது, பிரதமர் மோடி துறவிகளுடன் கலந்துரையாடுவார் என்றும், மகா கும்பமேளாவில் கலந்து கொள்ளும் கோடிக்கணக்கான யாத்ரீகர்களுக்கான ஏற்பாடுகளை மதிப்பாய்வு செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.