
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
மதுரை வளையங்குளத்தில் மழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய அம்மாபிள்ளை, வீரமணி, வெங்கட்டி ஆகிய மூவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், உரிய நேரத்தில் மருத்துவம் அளிக்கப்படாத காரணத்தால் உயிரிழந்த பெருந்துயர நிகழ்வு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
மதுரை வளையங்குளம் அரசு மருத்துவமனையில், உரிய நேரத்தில் மருத்துவர் இல்லாத காரணத்தால் விபத்தில் சிக்கியவர்களுக்கு மருத்துவம் அளிக்க தாமதமான காரணத்தினாலேயே மூவரும் உயிரிழக்க நேரிட்டது என்று வேதனையுடன் குமுறும் உறவினர்களின் குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
ஐம்பதாண்டுகள் திராவிட கட்சிகள் மாறிமாறி தமிழ்நாட்டை தொடர்ச்சியாக ஆண்டபிறகும் அரசு மருத்துவமனையில் உயிர்காக்கும் மருத்துவம் கூட உரிய நேரத்தில், உயர் தரத்தில் கிடைக்கப்பெறாத இழிநிலையில் தமிழ் மக்களை வைத்திருப்பது ஏற்க முடியாத பெருங்கொடுமையாகும்.
சென்னை போரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லை என்று புகார் கூறிய சகோதரர் கஞ்சா கருப்பினை வெளிப்படையாக மிரட்டிய தி.மு.க. அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், வளையங்குளம் துயர நிகழ்விற்கு என்ன விளக்கமளிக்கப் போகிறார்? இதுதான் இந்தியாவே வியக்கும் தி.மு.க. அரசின் நான்காண்டு காலச் சாதனையா?
தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் போதிய அளவில் ஆசிரியர்கள் இல்லை, அரசு மருத்துவமனையில் போதிய அளவில் மருத்துவர்கள் - செவிலியர்கள் இல்லை, அரசு அலுவலங்களில் போதிய அளவில் ஊழியர்கள் இல்லை எனும் நிலையில், திராவிட மாடல் ஆட்சியில் எல்லாருக்கும் எல்லாம் என்பது வெற்று விளம்பர முழக்கம் என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
வளையங்குளம் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன். மக்கள் நல்வாழ்வுத்துறையின் மோசமான நிர்வாகச் செயல்பாட்டால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, தமிழ்நாடு அரசு தலா 50 லட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியும், அரசு வேலையும் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.