தியாகராயநகர் நகர்ப்புற சுகாதார மற்றும் நலவாழ்வு மையத்தில் தடுப்பூசி சேவையினைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

4 hours ago 3

தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, சட்டமன்ற மானியக்கோரிக்கை 2025-26 அறிவிப்பு நகர்ப்புற சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்களில் தடுப்பூசி சேவைகள் விரிவாக்கம் தொடக்க விழா- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தடுப்பூசி சேவையினை தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (14.05.2025) தியாகராயநகர், நகர்ப்புற சுகாதார மற்றும் நலவாழ்வு மையத்தில் சட்டமன்ற மானியக்கோரிக்கை 2025-26 அறிவிப்பின் கீழ், நகர்ப்புற சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்களில் தடுப்பூசி சேவைகள் விரிவாக்கம் செய்யப்படும் என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து, தடுப்பூசி சேவையினைத் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி சேவைகள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் தடுப்பூசி தகவல் கையேட்டினை வெளியிட்டார்கள். பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- தடுப்பூசி சேவைகள் விரிவாக்கம் மக்கள் நல்வாழ்வுத்துறையில் ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படுகின்ற அறிவிப்புகள் எல்லாம் அந்த ஆண்டு நிறைவு பெறுவதற்குள் முடித்து நிறைவேற்றப்பட்ட அறிவிப்புகளை புத்தகமாக அச்சடித்து மன்ற உறுப்பினர்களுக்கு தருவது என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வேறு எந்த துறையிலும் இல்லாத அளவிற்கு கடந்த 4 ஆண்டுகளில் இந்த துறையில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை தொடர்ந்து புத்தக வடிவில் அச்சிட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். அந்தவகையில் 2025-26 ஆம் ஆண்டு மானியக்கோரிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. அப்படி அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் ஒன்று நகர்ப்புற சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்களில் தடுப்பூசி சேவைகள் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் 708 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையம் அமையும் என்று அறிவித்து, கடந்த 2023 ஜீன் திங்களில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை திறந்து வைத்தார்கள். மீதமிருக்கும் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களின் பணிகள் முடிவுற்று பணியாளர்கள் தேர்வு செய்யும் நடைமுறை மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கம் மூலம் நடைபெற்றுள்ளது. இன்னமும் ஓரிரு வாரங்களில் அந்தப் பணிகள் முடிவுற்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சென்னையிலிருந்து காணொளி வாயிலாக 208 இடங்களிலிருக்கின்ற மீதமிருக்கும் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

இதேபோல் இந்த மையங்களில் தடுப்பூசி சேவைகள் விரிவாக்கம் செய்யப்படும் என்கின்ற அறிவிப்பு தமிழ்நாட்டில் உள்ள 25 மாநகராட்சிகளிலும், 63 நகராட்சிகளிலும் அமைந்திருக்கின்ற 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் பெரும் உதவியாக அமையும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 6 நோய்களை தடுப்பதற்கு விரிவுப்படுத்தப்பட்ட தடுப்பூசி திட்டம் 1978 இல் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தை மேலும் வலுப்படுத்தி நாடு தழுவிய தடுப்பூசி திட்டம் 1985 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டிருக்கிறது. தடுப்பூசி திட்டத்தின்கீழ் 11 வகையான தடுப்பூசிகளை கர்ப்பிணி தாய்மார்களுக்கும் 12 வகையான தடுப்பூசி குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது காசநோய், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், மஞ்சள் காமாலை, H இன்புளூயன்ஸா – நிமோனியா மற்றும் மெனிஞ்ஜிடிஸ், இரணஜன்னி, போலியோ, தட்டம்மை, ரூபெல்லா, ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கு நோய், நியுமோகோக்கல் நியுமோனியா மற்றும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் ஆகிய நோய்களிலிருந்து இந்த தடுப்பூசிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 9,58,000 கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் 8,76,000 குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு தடுப்பூசி செலுத்துவதில் 99% தொடர்ந்து நிறைவேற்றி மற்ற மாநிலங்களை காட்டிலும் ஒரு மகத்தான சாதனையை படைத்து வருகிறது. 36 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் 37 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் 255 வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவனைகளிலும் 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஏறத்தாழ 1.2 மில்லியன் அளவிற்கு நோய்வாய்பட்டு இறக்கிறார்கள். இதில் 15.9% அளவிற்கு இறப்புகள் நியுமோனியா தொற்றால் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தான் நியுமோகோக்கல் தடுப்பூசி தேசிய தடுப்பூசி திட்டத்தில் இணைக்கப்பட்டு குழந்தைகளுக்கு 6 வாரங்கள், 14 வாரங்கள், மீண்டும் 9வது மாதத்தில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தைப் பொறுத்தவரை கடந்த ஆட்சிக்காலத்தில் இந்த திட்டத்தைப் பயன்படுத்தாமலேயே தடுப்பூசிகளை எல்லாம் இருப்பில் வைத்திருந்தார்கள்.

2021 ஜீலை திங்கள் 17ஆம் தேதி மீண்டும் இந்த தடுப்பூசி திட்டத்தை பூவிருந்தவல்லியில் இருக்கின்ற நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த திட்டமானது 2021 ஜீலை திங்கள் 27 முதல் தமிழ்நாடு முழுவதிலும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் நியுமோகோக்கல் தடுப்பூசி 2021 ஆம் ஆண்டு முதல் தவணையாக 534634 பேருக்கும் இரண்டாவது தவணையாக 3,93,160 ஆக மொத்தம் 9,27,794 குழந்தைகள் பயன்பெற்றிருக்கிறார்கள். அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் நியுமோகோக்கல் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தின்கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு சேவைகள், தடுப்பூசி செலுத்துதல் உட்பட 12 விரிவான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதில் பெருமை அடைகிறோம்.

என்எம்சி நோட்டீஸ் தொடர்பான கேள்விக்கு தமிழ்நாட்டில் மட்டுமே தேசிய மருத்துவ கவுன்சில் (NMC) நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக பெரிய பிம்பத்தை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியா முழுமைக்கும் 400க்கும் மேற்பட்ட மருத்துவக்கல்லூரிகளில் என்எம்சி நிர்வாகம் ஆண்டு தோறும் நோட்டீஸ் வழங்கி வருகிறது. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் உள்ள மருத்துவக்கல்லூரிகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. வழங்கும் நோட்டீஸ்களுக்கு பதில் அனுப்புவோம். பிறகு அது சரி செய்யப்பட்டு விடும். ஏற்கெனவே அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி போன்ற மருத்துவமனைகளிலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இதுபோன்ற பிரச்சினை சரி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்திலும் இதுபோன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 35 மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவக் குழுமம் சில பற்றாக்குறைகளுக்கான விளக்கத்தினை கேட்டு கடிதம் அனுப்பி உள்ளது. 26 கல்லூரிகள் உரிய பதிலை தக்க விளக்கங்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தேசிய மருத்துவ குழுமத்திற்கு அனுப்பியுள்ளன.

மூன்று கல்லூரிகள் இன்றைக்கு தங்கள் பதிலை அனுப்ப உள்ளன. மீதமுள்ள மருத்துவக் கல்லூரிகள் வரும் வெள்ளிக்கிழமைக்குள் உரிய விளக்கத்தினை அனுப்பி விடுவதற்கு உரிய வழிகாட்டுதலை மருத்துவ கல்வி இயக்ககம் வழங்கியுள்ளது. பொதுவான மேற்கோள் கட்டப்பட்ட குறைபாடுகள் – பபயோமெட்ரி வருகை பதிவு போதாமை மற்றும் உரிய ஆசிரிய பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும், மருத்துவர்கள் தங்கள் பயோமெட்ரிக் வருகை மற்றும் செல்கை பதிவை கட்டாயமாக்குமாறு கல்லூரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்னொன்று மருத்துவர்கள் பற்றாக்குறை என்று சொல்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்னாள் 2246 மருத்துவர்கள் காலிப்பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்ப்பட்டுள்ளது. இதில் வெறும் MBBS மருத்துவர்கள் மட்டும் வர மாட்டார்கள். முதுகலை பட்டம் படித்த மருத்துவர்களும் வருவார்கள். இதில் முதுகலை பட்டம் படித்தவர்கள் அவர்களை மருத்துவக்கல்லூரிகளில் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். அதற்கு நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. போன வாரம் அந்த வழக்கு முடிக்கப்பட்டுள்ளது.

தற்போது மருத்துவக்கல்லூரிகளில் மொத்தம் 415 காலிப்பணியிடங்கள் இருந்தது. இதில் கடந்த வாரம் 318 காலிப்பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள 87 காலிப்பணியிடங்கள் நேற்று மாலை நிரப்பப்பட்டுள்ளது. எனவே அரசு மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவர்கள் காலிப்பணியிடம் என்பது இல்லை. மேலும் இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் அளவிலான காலி பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள். இந்நிகழ்வில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மரு.நா.எழிலன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) டாக்டர் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி, இ.ஆ.ப., மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜெ.பிரவீன் குமார், இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர் (பொது சுகாதாரம்) டாக்டர் கோ.சாந்தகுமாரி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.செல்வ விநாயகம், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு.சங்குமணி, கூடுத இயக்குநர் மரு.தேரணி ராஜன், மாநகர அலுவலர் மரு.ஜெகதீசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post தியாகராயநகர் நகர்ப்புற சுகாதார மற்றும் நலவாழ்வு மையத்தில் தடுப்பூசி சேவையினைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்! appeared first on Dinakaran.

Read Entire Article