
சென்னை,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு பேசியதாவது;
"முதல்-அமைச்சரின் பிறந்தநாளில் அவரை வாழ்த்துகிறோம். இந்த மண்ணையும், மக்களையும் பாதுகாக்கும் அரணாக அவர் விளங்க வேண்டும். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவுக்கே வழிகாட்டும் ஆற்றல் வாய்ந்த தலைவராக முதல்-அமைச்சர் விளங்குகிறார்.
நாட்டில் மொழிக்கு பாதுகாப்பில்லை, மக்களுக்கு பாதுகாப்பில்லை, பன்மைத்துவத்திற்கு பாதுகாப்பில்லை, சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லை, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கே பாதுகாப்பில்லை.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கிற அத்தனை முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உற்ற துணையாக இருக்கும். மீண்டும் இந்த மண்ணில் உங்கள் தலைமையிலான ஆட்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். அப்போதுதான் பெரியாரின் கருத்தியலை பாதுகாக்க முடியும். அம்பேத்கரின் சிந்தனைகளை பாதுகாக்க முடியும். உழைக்கும் மக்களின் கனவை நனவாக்க முடியும். ஒட்டுமொத்த தேசத்தையும், அரசமைப்பு சட்டத்தையும் பாதுகாக்க முடியும் என்று நம்புகிறோம். உங்களோடு எப்போதும் உற்ற துணையாக இருப்போம்."
இவ்வாறு அவர் பேசினார்.