சென்னை: கடந்த மூன்று ஆண்டு காலத்தில் ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் ரூ. 46.65 கோடி செலவில் 2,000 பட்டியல் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற 90 சதவிகிதம் மானியம் வழங்கப்பட்டுள்ளது என்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் சிலவற்றை குறிப்பிடுவது மிகப் பொருத்தமுடையதாகும். இந்த அரசு அமைந்தவுடன் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் தமிழ்நாடு மாநில பட்டியல் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் அமைக்கப்பட்டது. ஓய்வுப் பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் செயல்படும் இவ்வாணையத்தின் மூலம் தற்போது வரை 3695 மனுக்கள் பெறப்பட்டு 2945 மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.