
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் தருமத்துப்பட்டி அருகே பன்றிமலை, ஆடலூர் செல்லும் மலைப்பாதையில் அமைதிச்சோலை வனப்பகுதியில் ஆதிமூல பிள்ளை ஓடை உள்ளது. இந்த ஓடையில் இருந்து சுமார் 500 அடி பள்ளத்தில், இளம்பெண் ஒருவரின் உடல் தீப்பிடித்து எரிவதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கன்னிவாடி போலீசார்க்கு மக்கள் தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன், கன்னிவாடி இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சிராஜுதீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் 500 அடி பள்ளத்தில் இறங்கி, பாதி எரிந்த நிலையில் கிடந்த 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் சடலத்தை போலீசார் மீட்டனர்.
பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார், இங்கு எப்படி வந்தார் என்பதை வழித்தட கிராமங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் கொண்டு விசாரணை நடபெற்று வருகிறது. இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அவரை யாரோ கடத்தி வந்து, மலைப்பகுதியில் வைத்து தீ வைத்து எரித்து கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.