
லக்னோ,
நடப்பு ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 61வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஐதரபாத் 18.2 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. இதன் மூலம் லக்னோவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றிபெற்றது.
இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 20 பந்துகளில் 59 ரன்கள் குவித்தார். அவர் 7.3 ஓவரில் திக்வேஷ் வீசிய பந்தில் கேட்ச் மூலம் அவுட் ஆனார்.
அபிஷேக் அவுட் ஆனதை திக்வேஷ் தனது வழக்கமான பாணியில் (நோட்புக் செலிபிரேஷன்) கொண்டாடினார். அபிஷேக்கை நோக்கி கையசைத்தவாறு விக்கெட் எடுத்ததை திக்வேஷ் கொண்டாடினார். இதனால் ஆத்திரமடைந்த அபிஷேக் மைதானத்திலேயே திக்வேஷ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் நடுவர்கள் மற்றும் வீரர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர்.
பின்னர் இது குறித்து விசாரணை மேற்கொண்ட ஐ.பி.எல். நிர்வாகம் திக்வேஷ் ரதிக்கு 2 தகுதி இழப்பு புள்ளியும் போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதமாகவும் விதித்தது. நடப்பு தொடரில் ஏற்கனவே 3 தகுதி இழப்பு புள்ளிகள் பெற்றிருந்த திக்வேஷ் ரதி இதனையும் சேர்த்து 5 தகுதி இழப்பு புள்ளிகள் பெற்றதால் ஒரு போட்டியில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம் அபிஷேக் சர்மாவுக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளியும், போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமாகவும் விதித்து ஐ.பி.எல். நிர்வாகம் தண்டனை வழங்கியுள்ளது.