தாமரைப்பாக்கம் கங்கையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

1 week ago 7

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தாமரைப்பாக்கம் ஊராட்சியில் கங்கையம்மன் திருக்கோவில் உள்ளது. இத்திருகோவிலை இக்கிராம மக்கள் ஏழு தலைமுறையாக வழிபட்டு வருகின்றனர். இக்கோவிலில் இரண்டாம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 3-ம் தேதி செவ்வாய்க்கிழமை துவங்கி தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கங்கை அம்மனுக்கு கூழ்வார்க்கும் நிகழ்ச்சி, கரகம் உடை களைந்து வேப்பிலை சாத்துதல், கரகம் ஊர்வலம், கங்கை நீராடுதல், புதிய ஆலயத்தில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கிராம தேவதை பொன்னியம்மனுக்கு ஊர் கூடி பொங்கல் வைத்தனர். கங்கையம்மனுக்கு பாலாபிஷேகம், மாங்கல்ய பூஜை, கரக ஊர்வலம், வெங்கடேச பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நேற்று அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. கங்கை அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர், சிலை கரகம் எடுத்து வந்தனர். மாலையில் கங்கையில் பக்தர்களுக்கு பூச்சூட்டுதல், பழம் போடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்வான தீமிதி நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. புதிய ஆலயத்தின் எதிரே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் ஒருவர் பின் ஒருவராக 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர், சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும், அம்மனுக்கு கும்பம் படைக்கும் நிகழ்ச்சியும், உடை களைதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

Read Entire Article