தாமரைப்பாக்கம் அருகே பரபரப்பு மர்ம காய்ச்சலால் குழந்தை உட்பட 3 பேர் பலி; 10 பேருக்கு சிகிச்சை: சுகாதார பணிகள் தீவிரம், அதிகாரிகள் நேரில் ஆய்வு

4 months ago 9

ஊத்துக்கோட்டை: தாமரைப்பாக்கம் அருகே, தனியார் செங்கல் சூளையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குழந்தை உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 10க்கும் மேற்பட்டோருக்கு மர்ம காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தாமரைப்பாக்கம் அருகே, மேலக்கொண்டையூர் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் தனியார் செங்கல் சூளை நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்தில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்பட போதிய வசதிகள் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக இந்த செங்கல் சூளையில் வேலை செய்யும் ஒரு சில தொழிலாளர்களுக்கு மர்ம காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

இதில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு 4 மாத கைக்குழந்தை ஒன்று மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. இதனைதொடர்ந்து, சூளையில் வேலை செய்யும் ராமகிருஷ்ணா தியாகு (65) மற்றும் அலந்தர் சந்தா (52) ஆகிய இருவருக்கும் மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதில் தியாகு நேற்று முன்தினமும், அலந்தர் சந்தா நேற்றும் என அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனையடுத்து, அச்சம் அடைந்த 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர்.

மர்ம காய்ச்சலால் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தது குறித்து தகவலறிந்த வெள்ளியூர் மற்றும் புலியூர் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலைய மருத்துவர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில், 20க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் செங்கல் சூளையில் காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். அதன் அடிப்படையில், காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை கண்டறிந்து, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த மர்ம காய்ச்சலுக்கு மேலும் 10க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்த மருத்துவர்கள், நோய் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து மர்ம காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை ஆம்புலன்ஸ் உதவியுடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து, தகவலறிந்த திருவள்ளூர் தாசில்தார் ரஜினிகாந்த் மற்றும் பிடிஒ குணசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் மேலக்கொண்டையூர் கிராமத்திற்கு நேரடியாகச் சென்று, செங்கல் சூளையை ஆய்வு செய்து மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு வலியுறுத்தினர். பின்னர் அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அதிகாரிகள் செங்கல் சூளையில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

The post தாமரைப்பாக்கம் அருகே பரபரப்பு மர்ம காய்ச்சலால் குழந்தை உட்பட 3 பேர் பலி; 10 பேருக்கு சிகிச்சை: சுகாதார பணிகள் தீவிரம், அதிகாரிகள் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article