சண்டிகர்:
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவதற்கு, அரசு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கத் தலைவர் ஜெகஜித் சிங் தல்லேவால் (வயது 70) கடந்த நவம்பர் 26-ம் தேதி கனவுரி எல்லை அருகே உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக கூறிய அவர், தொடர்ந்து மருத்துவ சிகிச்சையையும் ஏற்க மறுத்தார். இதனால் நாளாக நாளாக அவரது உடல்நிலை மோசமானது.
அவருக்கு ஆதரவாக கடந்த புதன்கிழமை 111 விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் இணைந்தனர். தல்லேவாலுக்கு முன்னதாக தாங்கள் உயிர்த்தியாகம் செய்ய தயாராக இருப்பதாகவும் அவர்கள் கூறியிருந்தனர். அதன்பின்னர் நேற்று முன்தினம் மேலும் 10 விவசாயிகள் உண்ணாவிரதத்தில் இணைந்தனர்.
இந்நிலையில், மத்திய வேளாண் அமைச்சகத்தின் இணை செயலாளர் பிரியா ரஞ்சன் தலைமையிலான குழுவினர் விவசாய சங்க பிரதிநிதிகளையும், உண்ணாவிரதம் இருக்கும் தல்லேவாலையும் நேற்று சந்தித்து பேசினர். அப்போது பிப்ரவரி 14-ம் தேதி சண்டிகாரில் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து தல்லேவால் மருத்துவ சிகிச்சை பெற சம்மதித்தார். அதன்பின்னர் தல்லேவாலுக்கு நரம்பு வழியாக மருந்து செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து தல்லேவாலுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 121 விவசாயிகளும் இன்று உண்ணாவிரதத்தை கைவிட்டனர். காவல்துறை டிஐஜி மந்தீப் சிங் சித்து மற்றும் பாட்டியாலா சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு நானக் சிங் ஆகியோர் முன்னிலையில் 121 விவசாயிகளும் பழச்சாறு குடித்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டனர்.
இருப்பினும், பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்கப்படும் வரை தல்லேவால் தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை கைவிட மாட்டார் என்று விவசாயத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.