
தர்மபுரி,
தர்மபுரி பஸ் நிலையத்தில் நேற்று முன் தினம் அதிகாலை சென்னையை சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் மற்ற பயணிகளை முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
தர்மபுரியில் இரவு நேரத்தில் கூட பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். சென்னை, பெங்களூர், கோவை, சேலம் போன்ற நகரங்களுக்கு செல்ல இரவு நேரத்தில் கூட பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால், எப்போதும் பரபரப்பாக தர்மபுரி பேருந்து நிலையம் காட்சியளிக்கும்.
இதனால் பாதுகாப்பு கருதி போலீசாரும் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் தான் கடந்த வெள்ளிக்கிழமை தர்மபுரி பேருந்து நிலையத்திற்கு வந்த இரண்டு பெண்கள் வாலிபர் ஒருவருடன் முகம் சுளிக்க வைக்கும் வகையில் நடந்து கொண்டனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள், பொது இடத்தில் இப்படியா நடந்து கொள்வது என கண்டித்தனர். இதனால், கோபம் அடைந்த அந்த இளம்பெண்கள், கண்டித்த பயணிகளை தரக்குறைவாக பேசினர். இதையடுத்து போலீசாருக்கு பயணிகள் சிலர் தகவல் தெரிவித்தனர். இதில், பஸ் நிலையத்தில் முகம் சுளிக்க வைக்கும் வகையில் நடந்து கொண்ட பயணிகள் சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
அந்த பெண்கள் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. போலீசாரிடமும் அந்த பெண்கள் ரகளையில் ஈடுபட்டது அங்கு இருந்த பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. சிறிது நேரத்தில் அந்த பெண்கள் இருவரும் கிருஷ்ணகிரி செல்லும் பேருந்தில் ஏறி சென்றனர். தர்மபுரி பேருந்து நிலையத்தில் இந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இந்நிலையில் சென்னைக்கு வந்த அவர்கள் இருவரையும் தர்மபுரி போலீசார் கைது செய்தனர்.