
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் வருகின்ற 21-ம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 22-ம் தேதி வாக்கில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். பிறகு இது வடக்கு திசையில் நகரக்கூடும். தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மார்ச் 1 முதல் இன்று வரை பெய்த மழைப்பொழிவு அதிகரித்துள்ளது. குறிப்பாக கள்ளக்குறிச்சியில் இயல்பான மழை அளவு சராசரி 6.2 மட்டுமே ஆனால் தற்போது 28 செ.மீ. அளவிற்கு மழை பதிவாகி உள்ளது. இந்த அளவானது கிட்டத்தட்ட இயல்பைவிட 83 சதவீதம் அதிகமாகும்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்தாலும் ஒரு சில இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகத்தில் மார்ச் 1-ல் இருந்து தற்போது வரை பெய்த மழையின் அளவு இயல்பை விட கிட்டத்தட்ட 90 சதவீதம் அதிகமாக பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.