
மும்பை,
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை திட்டத்தின் மூலம், மராட்டிய மாநிலம் முழுவதும் உள்ள மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தியை கட்டாய 3-வது மொழியாக மாற்றப்படும் என மராட்டிய மாநில அரசு அறிவித்தது. இதற்கு நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனை தொடர்ந்து பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கும் 2 அரசாணைகளை மராட்டிய மாநில அரசு திரும்ப பெற்றது. இதனிடையே மராட்டிய அரசை கண்டித்து வரும் ஜூலை 5-ந்தேதி உத்தவ் தாக்கரே சிவசேனா மற்றும் நவநிர்மாண் சேனா கட்சிகள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்த நிலையில், அந்த போராட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியை கொண்டாடும் விதமாக மராட்டிய நவநிர்மாண் சேனா மற்றும் உத்தவ் தாக்கரே சிவசேனா ஆகிய கட்சியினர் இணைந்து மும்பையில் இன்று வெற்றி பேரணி நடத்தினர். மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகிய இருவரும் ஒரே மேடையில் தோன்றினர்.
இரு தரப்பினரிடையே சுமார் 20 ஆண்டுகளாக அரசியல் ரீதியாக மோதல் நீடித்து வந்த நிலையில், இரு சகோதரர்களும் இணைந்து இன்று முதல் பொதுக்கூட்டத்தை நடத்தியுள்ளனர். இந்த கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, "மொழி வெறியை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார். மராட்டிய மாநிலத்திற்கு வெளியே மராத்தி மொழியை திணிக்க எந்த மராட்டியர் யாராவது முயற்சி செய்துள்ளார்களா?
தமிழ்நாட்டிலும், மேற்கு வங்காளத்திலும் இந்தியை திணிக்க பா.ஜ.க. முயற்சி செய்து பார்க்கட்டும். நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை, ஆனால் நீங்கள் எங்களை கட்டாயப்படுத்தினால், எங்கள் சக்தியைக் நாங்கள் காட்டுவோம்" என்று தெரிவித்தார்.