தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடியை கண்டித்து கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் - செல்வப்பெருந்தகை அறிவிப்பு

1 day ago 3

தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 6-ம்தேதி வருகை தரும், பிரதமர் மோடியை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்தே தமிழ்நாட்டையும், தமிழர்களையும் ஜனநாயக விரோத திட்டங்கள் மூலம் வஞ்சித்து வருகிறது. இந்தி திணிப்பு, மும்மொழிக் கொள்கை, புயல், வெள்ளம் பாதித்த தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்கு பேரிடர் நிதி ஒதுக்காதது, தமிழ்நாட்டிற்கு பள்ளிக்கல்விக்காக ஒதுக்கிய நிதியை வழங்காமல் இருப்பது;

உயிர்கொல்லி நீட் தேர்வால் அன்றாடம் தற்கொலைகள் அதிகரித்து கொண்டுள்ளது, இந்த கொடிய தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்காதது, மாநில திட்டங்களுக்கு மத்திய நிதி ஒதுக்கீட்டில் பாராபட்சம் காட்டுவது, தமிழ்நாட்டிலிருந்து அதிகமான ஜி.எஸ்.டி வரி வருவாய் கிடைத்த போதும் நியாயமாக கிடைக்க வேண்டிய நிதியை வழங்காமல் இருப்பது, பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் கவர்னர்களை வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு நெருக்கடியை கொடுப்பது, சென்னை மெட்ரோ 2-ம் கட்டத்திற்கான நிதியை தாமதப்படுத்துவது;

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை, மகாத்மா காந்தி பெயரில் இருப்பதால் என்னவோ முடக்க நினைக்கின்றது. அவ்வகையில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.4,034 கோடியை தராமல் கிராமப்புற மக்களின் வாழ்வில் விளையாடுகிறது மத்திய அரசு.

இதுபோன்ற காரணங்களால் தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 6-ம் தேதி வருகை தரும், பாரத பிரதமர் மோடியை கண்டித்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்ட தலைவர்கள் மற்றும் எனது தலைமையில் சென்னையில் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article