
சென்னை,
மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 12 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்த நிலையில், தெற்கு கொங்கன் - கோவா கடலோரப் பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது நாளை மாலை காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளை தொடங்குகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது .
கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு பல மாவட்டங்களில் அதிகனமழை பெய்வதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை அடுத்து குவாரிகளை மூட கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரளா அரசு தீவிரப்படுத்தியுள்ளது.