சென்னை,
காலநிலை மாற்றம் உலகத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கவும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழக இயக்கம் மற்றும் தமிழ்நாடு சதுப்பு நிலை இயக்கம் ஆகிய மூன்று இயக்கங்களை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி உள்ளது. முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் செயல்படும் இந்த காலநிலை மாற்ற நிர்வாக குழுவில் பல்துறை வல்லுநர்கள் மற்றும் பல்துறை மூத்த அரசு செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு காலநிலை மாற்ற 3-வது உச்சி மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார். அப்போது சுற்றுச்சூழல் விருதுகளை வழங்கி பல்வேறு புதிய திட்டங்களை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
மேலும் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான இணையதளம், தொழிற்சாலை பசுமை குறியீடு போன்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார். சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை சார்பில் 2 நாட்களுக்கு உச்சி மாநாடு நடைபெறுகிறது.