தமிழ் மொழியை கற்றுத்தரும் ஈஷா: ஆர்வத்துடன் கற்கும் பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த மக்கள்

10 hours ago 2

கோவை: கோவை ஈஷா யோக மையத்தில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்து தன்னார்வத்தொண்டு புரியும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு தமிழ் மொழியை கற்றுத் தரும் வகுப்புகள் நடைபெறுகின்றன. இதில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளை சேர்ந்த மக்கள் ஆர்வத்துடன் தமிழ் மொழியை கற்று வருகின்றனர்.

ஈஷா யோக மையத்திற்கு, யோகப் பயிற்சிகளை கற்றுக் கொள்ளவும், தியானலிங்கம், லிங்க பைரவி மற்றும் ஆதியோகியின் தரிசனம் பெறவும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

அதே போன்று பல்வேறு கலாச்சார பின்னணிகளை கொண்ட மக்கள் ஈஷா யோக மையத்திற்கு வந்து தங்கி இருந்து ஈஷாவின் பல்வேறு ஆன்மீக மற்றும் சமூக நலப் பணிகளில் தங்களை முழு நேரமாக ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். அவ்வாறு ஈஷாவில் தங்கியிருக்கும் தமிழ் அல்லாத பிற மொழிகளை தாய் மொழியாக கொண்டிருக்கும் மக்களுக்கு ஈஷாவில் தமிழ் மொழியை கற்றுத்தரும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து ஈஷாவில் தமிழ் மொழி வகுப்புகளை ஒருங்கிணைத்து நடந்தும் அருண் கூறுகையில், “ஈஷாவில் பல்வேறு மொழிகளை பேசும் மக்கள் தன்னார்வலர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு தமிழ் மொழியில் எழுத, படிக்க, பேச, பாட மற்றும் உரையாடல்களை உருவாக்க பயிற்சி அளிக்கப்படுகின்றது. இந்த பயிற்சி வகுப்புகள் முதல் நிலையில் 12 நாட்கள் தொடர் பயிற்சி வகுப்புகளாகவும், அடுத்த நிலையில் வாரத்திற்கு ஒரு நாள் வகுப்பு என 10 முதல் 12 வாரங்கள் நடைபெரும் வகையில் நடத்தப்படுகிறது.

முதல் நிலை பயிற்சியில் ஒவ்வொரு நாள் வகுப்புகளும் மூன்று பகுதிகளாக பிரித்து நடத்தப்படுகிறது. ஒரு நாளில் இரண்டு மணி நேரம் நடைபெறும் வகுப்பில் முதல் பகுதியில் உயிர் எழுத்துக்கள் துவங்கி வார்த்தைகளை எழுதுவது வரை பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது.

இரண்டாம் பகுதியில் தமிழ் வார்த்தைகளை படிக்க பயிற்சி அளிக்கப்படுகின்றது, இதில் குறிப்பாக தமிழ் சினிமா மற்றும் பக்தி பாடல்களை ஒரு கருவியாக பயன்படுத்துகிறோம். உதாரணமாக சின்ன சின்ன ஆசை, பச்சை கிளிகள் தோளோடு இது போன்ற பாடல் வரிகளின் ஆங்கில மொழி பெயர்ப்பு மற்றும் அதன் அர்த்தத்துடன் கற்றுத் தருகிறோம். இதில் அந்த பாடல் வரிகளின் உச்சரிப்பையும் ஆடியோவாக ரெக்கார்டு செய்து அவர்களுக்கு தருகிறோம். இசையுடன் பாடல்கள் மூலம் கற்றுத் தரும் போது அவர்களுக்கு தமிழ் மொழியை கற்பது சற்று எளிமையாக இருக்கிறது.

அடுத்து மூன்றாம் பகுதியில் தமிழ் பண்பாட்டின் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தும் கதைகள் மூலமாக குறிப்பாக கோவில்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், பக்தி உள்ளிட்டவைகள் தொடர்பான கதைகள் மூலம் தமிழ் மொழியுடன் பண்பாட்டையும் கற்றுத் தருகிறோம். உதாரணமாக திருவள்ளுவர், கண்ணகி, மனுநீதிச்சோழன் இவ்வாறு ஒவ்வொரு நாளும் ஒரு தனிக்கதைகளை சொல்லும் போதே இவர்களுக்கு எல்லாம் தமிழ் பண்பாட்டில் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்றும் கூறுகிறோம். மேலும் இதனுடன் தமிழர்களின் விழாக்கள், உணவு முறைகள் என பல்வேறு அம்சங்களையும் இணைத்து கற்றுத்தர முடிகிறது. தமிழ் மொழியை கற்றுத் தருவதில் இந்தக் கதைகள் முக்கியமான அம்சமாக இருக்கிறது. பலரும் கதைகளை விரும்பி கேட்பதை கவனிக்க முடிகிறது.

இதனுடன் அவர்கள் தன்னார்வத் தொண்டு புரியும் துறைகளில் அன்றாடும் தேவைப்படும் உரையாடல்கள் மற்றும் திரைப்படத்தின் வசனங்களை கொண்டும் அவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதுவரை 5 வகுப்புகள் முடிவடைந்துள்ளன, இதில் சமீபத்தில் முடிவடைந்த பயிற்சி வகுப்பில் 75 பேர் கலந்து கொண்டனர், குறிப்பாக ரஷ்யா, தைவான் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும், மேற்குவங்கம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மக்கள் கலந்து கொண்டு தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டனர்.” என அவர் கூறினார்.

தமிழ் மொழி பயிற்சி வகுப்பில் பங்கேற்ற தைவான் நாட்டை சேர்ந்த ஜெனி கூறுகையில், “ இந்த தமிழ் பயிற்சி வகுப்பில் பங்கேற்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு நீண்ட நாட்களாகவே தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது. இந்த வகுப்பின் மூலம் முறையாக எப்படி எழுதுவது மற்றும் படிப்பது போன்றவற்றை கற்றுக் கொண்டோம். எனக் கூறினார்.

அதே போன்று ராஜஸ்தானை சேர்ந்த நம்ரிதா கூறுகையில், “ முதலில் என்னால் தமிழ் மொழியை கற்றுக் கொள்ள முடியாது என நினைத்து இருந்தேன். ஆனால் இங்கு தமிழ் பாடல்கள் மற்றும் கதைகள் மூலம் மொழியைக் கற்றுத் தருவது உதவியாக இருக்கிறது.” எனக் கூறினார்.

மேலும் ஈஷாவில் தமிழ் மொழி, கலைகள், பண்பாடு மற்றும் வரலாற்றை கொண்டாடும் வகையில் தமிழ்த் தெம்பு எனும் பிரம்மாண்ட திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஈஷா சமஸ்கிருதி பள்ளியில் மாணவர்களுக்கு தேவார பதிகங்களும் கற்றுத் தரப்படுகின்றன.

The post தமிழ் மொழியை கற்றுத்தரும் ஈஷா: ஆர்வத்துடன் கற்கும் பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த மக்கள் appeared first on Dinakaran.

Read Entire Article