
சென்னை,
நடிகர் ஸ்ரீகாந்த் கைது விவகாரம் சினிமா உலகில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வரும்நிலையில், போதைப்பொருளை பயன்படுத்தியது தொடர்பாக மேலும் சில பிரபலங்கள் சிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், இசையமைப்பாளர், விஜய் ஆண்டணி, பாடகி சுசித்ரா உள்ளிட்டோரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.
இதுகுறித்து பாடகியும் நடிகையுமான சுசித்ரா அளித்திருந்த பேட்டியில்,
ஸ்ரீகாந்த்துக்கு இப்போது திடீர் ரசிகர்கள் முளைத்திருக்கிறார்கள். அவர் இத்தனை வருடங்களாக திரைத்துறையில் வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்தபோது இவர்கள் எங்கே போனார்கள்? மகனை கவனிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் ஸ்ரீகாந்த் கதறி அழுகிறார். ஆனால் கொக்கைன் அடிக்கும் பொழுது மகன் நினைப்பு வரவில்லையா? தமிழ் திரையுலகில் பலர் இந்த கொக்கைன் போதைப் பொருளை பயன்படுத்துகிறார்கள்.
திரைத்துறையை பொறுத்தவரை போதைப் பொருட்களை பயன்படுத்தும் யாருமே ரத்த பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டார்கள். ஷாருக்கானின் மகனுக்கு கூட ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா? தெரியவில்லை.மும்பை போன்ற இடங்களில் இருந்து சில கவுரவ வேடங்கள், ஐட்டம் பாடல்களுக்கு நடிக்க வருபவர்கள் போதைப் பொருள் கலாச்சாரத்தை தமிழ் திரைத்துறைக்குள் புகுத்திவிட்டனர். சென்னையில் உள்ள அனைத்து மதுபான விடுதிகள், பப்களில் இது சர்வ சாதாரணமாக கிடைக்கிறது.
அந்த காலத்தில் இருந்த நடிகைகள் குடிப்பழக்கத்தில் இருந்த தங்களது கணவர்களை மீட்டு எடுத்ததை பார்த்திருப்போம் ஆனால் இந்த காலத்தில் நடிகர்கள் மனைவிகளே ஊற்றிக் கொடுப்பதும் பார்ட்டிகளில் கலந்து கொள்வதை பார்க்க முடிகிறது. எனக்கும் கொக்கைன் பயன்படுத்துவதற்கு அருகில் வரை வாய்ப்புகள் வந்தது, ஆனால் நான் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன் என்றார்.