தமிழகம் முழுவதும் மாணவர்கள் எழுச்சி முதல்வர் கல்வி வளர்ச்சி நிதிக்கு பெருகும் ஆதரவு: விளையாட்டு பயிற்சி மாணவர்கள் பணம் அனுப்பினர்

6 hours ago 1

 

கடலூர், பிப். 28: தமிழகம் முழுவதும் மாணவர்கள் எழுச்சியாக முதல்வர் கல்வி வளர்ச்சி நிதிக்கு ஆதரவு பெருகி வருகிறது. ஒன்றிய அரசு தராவிட்டால் என்ன நாங்கள் இருக்கிறோம் என கடலூரில் இருந்து முதல்வரின் கல்வி நிதிக்கு துவங்கிய எழுச்சி தமிழகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. மும்மொழிக் கொள்கை தொடர்பாக ஒன்றிய அரசின் அறிவிப்பிற்கு தமிழக முதல்வர் திட்டவட்டமாக பதில் அளித்த நிலையில், ரூ.2000 கோடி தமிழகத்திற்கு கல்வி நிதிக்காக கிடைக்கப்பெற வேண்டிய நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த போது தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மும்மொழிக் கொள்கையால் இந்தி திணிப்பை ஆதரிக்க மாட்டோம் மொழிக்கு நாங்கள் எதிரி அல்ல, ஆனால் அதே சமயத்தில் திணிப்பு என்பதை ஏற்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார். மேலும் ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் இதுபோன்ற செயலுக்கு தமிழகம் ஆதரவளிக்காது எனவும் விளக்கமாக எடுத்துரைத்திருந்தார்.

இதற்கிடையே ஒன்றிய அரசு ரூ.2000 கோடி கொடுக்கவில்லை என்றால் என்ன, நான் என்னுடைய சேமிப்பில் இருந்து தருகிறேன் என கடலூரில் எல்கேஜி மாணவி நன்முகை தான் சேமித்த பணத்தில் இருந்து ரூ.10,000 தமிழக முதல்வரின் நிதிக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பிய நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் மாணவர்களின் எழுச்சியால் முதல்வர் நிவாரண நிதிக்கு ஆதரவு பெருகி வருகிறது.

இதன் வரிசையில் நேற்று கடலூரில் உள்ள அண்ணா விளையாட்டரங்கில் விளையாட்டு பயிற்சி பெறும் மாணவர்கள் முதல்வர் கல்வி வளர்ச்சி நிதிக்கு பணம் அனுப்பி வைத்தனர். இதுபோன்று கடலூர் மாவட்டத்தில் மாணவர் இயக்கங்களின் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களும் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

The post தமிழகம் முழுவதும் மாணவர்கள் எழுச்சி முதல்வர் கல்வி வளர்ச்சி நிதிக்கு பெருகும் ஆதரவு: விளையாட்டு பயிற்சி மாணவர்கள் பணம் அனுப்பினர் appeared first on Dinakaran.

Read Entire Article