
சென்னை,
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும்' என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடலோர ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் நாளை முதல் வரும் 19 வரை, மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வரும் 17 வரை அதிகபட்ச வெப்பநிலை சற்று உயரக்கூடும். இன்றும், நாளையும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும். வெப்ப நிலை, அதிக ஈரப்பதம் காரணமாக வெளியில் செல்வோருக்கு அசவுகரியம் ஏற்படலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, ஈரோடு, மதுரை விமான நிலையம், திருச்சி ஆகிய இடங்களில், வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் பதிவானது.