
தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்கள், மதுரை, நெல்லை மாநகராட்சிகள் உட்பட பல்வேறு ஊராட்சிகள் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் பல ஆண்டுகாலமாக புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் சென்னையைச் சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் பெல்ட் ஏரியா எனப்படும் 32 கி.மீ. பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட காலமாக குடியிருப்பவர்கள் மற்றும் இதர மாவட்டங்களில் ஆட்சேபகரமற்ற பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்குவதற்கான தடையை நீக்குவது தொடர்பாக, கடந்த பிப்ரவரி 10-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதன்படி சென்னையில் மட்டும் ஆட்சேபகரமற்ற புறம்போக்கு பகுதிகளில் 29,187 பேர், இதர மாவட்டங்களில் 57,084 பேர் என மொத்தம் 86,271 பேருக்கு பட்டா வழங்கப்படும் என்று கடந்த 17-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதும் முடிவு செய்யப்பட்டது. மேலும் 6 மாதங்களில் பட்டா வழங்க வருவாய்த்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் நில ஒதுக்கீட்டு வரம்புகளையும் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.