புதுடெல்லி,
இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்து டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. திமுக எம்.பிக்கள் மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பிக்கள் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவதை நிறுத்தவும், இலங்கையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப்படகுகளையும் விடுவிக்க வழி செய்யும் வகையில், உடனடியாக உயர்மட்ட தூதரக நடவடிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.
மீனவர்களின் கைதுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்!! தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்!! என முழக்கமிட்டு மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, மீனவர் பிரச்சனை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி நோட்டீஸ் அளித்துள்ளார். அதில் ,
இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது, இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு மட்டும் இலங்கை கடற்படையால் 530 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டு 71 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை சிறைகளில் தற்போது 97 மீனவர்கள் உள்ளனர்; தமிழ்நாட்டைச் சேர்ந்த 216 படகுகள் இலங்கை வசம் உள்ளது. மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.