
கொழும்பு,
இலங்கையில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்த நாட்டு அதிபர் திசநாயகாவை சந்தித்து பேசினார். அப்போது அவர், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும். பறிமுதல் செய்த அவர்களது படகுகளையும் ஒப்படைக்க வேண்டும் என்று நேரில் வலியுறுத்தி இருந்தார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், "மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினை குறித்து நாங்கள் விவாதித்தோம். இந்த விவகாரத்தை மனிதாபிமானத்துடன் அணுகுவது என ஒப்புக்கொண்டோம். மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும் வலியுறுத்தினோம்.
இலங்கை தமிழர் விவகாரத்தில் நாட்டின் அரசியல் சாசனத்தை இலங்கை அரசு முழுமையாக அமல்படுத்தும் என நம்புகிறோம். அதிபர் திசநாயகா தனது உள்ளடக்கிய அணுகுமுறையை என்னிடம் தெரிவித்தார். தமிழ் மக்களின் விருப்பங்களை அரசு நிறைவேற்றும் என்றும், இலங்கை அரசியலமைப்பை முழுமையாக செயல்படுத்துவதற்கும், மாகாண கவுன்சில் தேர்தல்களை நடத்துவதற்கும் அதன் உறுதிப்பாட்டை நிறைவேற்றும் என்றும் நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து இலங்கை பயணத்தை வெற்றிக்கரமாக முடித்துவிட்டு பிரதமர் மோடி அங்கிருந்து தற்போது ராமேஸ்வரம் வந்தடைந்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை அரசு தற்போது விடுதலை செய்துள்ளது. அவர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் விரைவாக நடந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.