தமிழக அரசு பணிகளில் இருந்து இன்று ஒரே நாளில் 8,144 பேர் ஒய்வு

1 day ago 4

சென்னை,

தமிழக அரசின் துறைகளில் தற்போதைய நிலையில் 9 லட்சத்து 42 ஆயிரத்து 941 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சுமார் 7 லட்சத்து 33 ஆயிரம் ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது 58-ல் இருந்து 60 ஆக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உயர்த்தப்பட்டது.

அதன்படி தற்போது மாநில அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆகும். ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் தாங்கள் பணியில் சேர்ந்த மாதத்தின் அடிப்படையில் ஓய்வு பெற்று வருவார்கள். குறிப்பாக மே மாதங்களில் தான் அதிகம் பேர் ஒய்வு பெறுவார்கள்.

அதற்கு முக்கிய காரணம், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அந்த முழு ஆண்டு முடிவு பெறும்போது மே மாதங்களில் தான் ஒய்வு பெறுவார்கள். அந்த அடிப்படையில் மே மாதம் 31-ந் தேதி இன்றுடன், ஒரே நாளில் சுமார் 8 ஆயிரத்து 144 பேர் ஒய்வு பெறுகின்றனர்.

அதாவது மாநில அரசின் குரூப்-ஏ பணியிடங்களில் 424 பேரும், பி பணியிடங்களில் 4 ஆயிரத்து 399 பேரும், சி பணியிடங்களில் 2 ஆயிரத்து 185 பேரும், குரூப்-டி பணியிடங்களில் 1,136 பேரும் ஓய்வு பெறுகிறார்கள். கல்லூரி பேராசிரியர்களை பொறுத்தவரை ஏ பிரிவிலும், ஆசிரியர்களை பொறுத்தவரை பி பிரிவு ஊழியர்களாக இருப்பார்கள்.

இந்தாண்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் ஒய்வு பெறுவது இதுவே அதிக எண்ணிக்கையாகும். இந்த எண்ணிக்கை மொத்த அரசு ஊழியர்களில் 0.86 சதவீதம் ஆகும். சென்னை தலைமை செயலகத்தில் மட்டும் 30 பேர் வரை இன்று ஒய்வு பெறுகிறார்கள். கடந்த மாதத்தில் (ஏப்ரல்) 22 பேர் ஒய்வு பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article