
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் சோமனூர் அருகே உள்ள மாதப்பூரைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் வருண்காந்த் (வயது 23). மனநலம் பாதித்த இவரை பொள்ளாச்சி மகாலிங்கபுரம் முல்லை நகரில் செயல்பட்டு வந்த தனியார் காப்பகத்தில் சேர்த்தனர். இந்தநிலையில் கடந்த 12-ந் தேதி வருண்காந்தை காப்பக ஊழியர்கள் அடித்து கொலை செய்தனர். பின்னர் காப்பக நிர்வாகி கவிதாவுக்கு சொந்தமான நடுபுணியில் உள்ள தோட்டத்தில் உடலை புதைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கவிதா உள்பட 11 பேரை கைது செய்தனர். மனநலம் பாதித்த வாலிபரை ஆழியாருக்கு சுற்றுலா அழைத்துச் சென்றபோது காணாமல் போனதாக நாடகம் ஆடியதும் அம்பலமானது.
முன்னதாக இந்த கொலை வழக்கில் தொடர்பு உடையவர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில் தனிப்படையைச் சேர்ந்த மகாலிங்கபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் தலைமையில் மேட்டுப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜா மற்றும் போலீசார் இடம் பெற்று இருந்தனர். இவர்கள் கடந்த 28-ந் தேதி திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து காரில் தப்பிச்சென்ற கவிதா, சுருதி, ஸ்ரேயா உள்பட 5 பேரை கைது செய்தனர். இதில் கவிதா, சுருதி, ஸ்ரேயா ஆகியோரிடம் இருந்து 18½ பவுன் நகைகள், ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆனால் பறிமுதல் செய்த நகை, பணம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. அதை கருவூலத்திலும் ஒப்படைக்கவும் இல்லை. இதற்கிடையில் கைதான 5 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கைதானவர்களின் உறவினர்கள் நகை, பணம் குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள், சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணனிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நகை, பணத்தை அவர் கையாடல் செய்தது தெரியவந்தது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக நகை, பணத்தை கையாடல் செய்த சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கொலை வழக்கில் குற்றவாளிடம் இருந்து நகை, பணத்தை கையாடல் செய்ததாக சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது