
மதுரை,
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உரிய விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டாலும், 47 ஆண்டுகளுக்்கு பிறகு இந்த ஆண்டு மதுரையில் இன்று நடைபெற இருக்கிறது. மதுரை உத்தங்குடியில் இதற்காக 90 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுக்குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை கழக நிர்வாகிகள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
இதில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் 1 மணி அளவில் விமானத்தில் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரமாண்ட ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள், பெண்கள் திரண்டிருந்து முதல்-அமைச்சரை வரவேற்றனர். வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். மலர்கள் தூவினர்.
மதுரையில் இதுவரை இல்லாத வகையில் நடந்த இந்த ரோடு ஷோ இந்த பிரமாண்ட ரோடு ஷோ நிகழ்ச்சி நடந்துள்ளது. பெருங்குடி பகுதியில் தொடங்கிய இந்த ரோடு ஷோ நிகழ்ச்சியானது, கிட்டத்தட்ட 25 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று, ஆரப்பாளையம் பகுதியில் நிறைவு பெற்றது. தொடர்ந்து நேற்று இரவில் அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இன்று காலையில் தொடங்கும் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். இதற்காக சென்னை அண்ணா அறிவாலயம் போன்ற முகப்பு தோற்றத்துடன் பொதுக்குழு நடைபெறும் அரங்கின் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. 100 அடி உயரத்தில் கொடிக்கம்பமும் நிறுவப்பட்டு, வண்ணமலர்களுடன் செயற்கை நீரூற்றும் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க 3,400 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கட்சி தலைமையில் இருந்து தனித்தனியாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுதவிர தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக செயல்படும் 23 அணியின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.
தி.மு.க. அமைப்பு ரீதியாக 76 மாவட்டங்கள் உள்ளன. அந்தந்த மாவட்டங்களுக்கு தனித்தனியாக சிறிய அரங்கு அமைக்கப்பட்டு அவர்களுக்கு பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்கான உரிய படிவம் வழங்கப்படுகிறது. அதனை அவர்கள் நிறைவு செய்து, மினிட் புத்தகத்தில் கையெழுத்து போட்டு பேட்ஜ் வாங்கி அணிந்து இன்று காலை 8 மணிக்குள் பொதுக்குழு அரங்கிற்குள் சென்று விட வேண்டும். அங்கும் மாவட்ட வாரியாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுக்குழு காலை 9 மணி அளவில் தொடங்கி நடக்கிறது. மதியத்திற்கு பிறகு கருத்தரங்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வருவபவர்கள் முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மதுரையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த பொதுக்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. பல்வேறு அதிரடி தீர்மானங்களும் நிறைவேற்றப்பட இருக்கின்றன.