புதுடெல்லி: தமிழக அரசின் மசோதாக்களை கிடப்பில் போட்ட விவகாரத்தில் அரசின் செயல்பாடுகளுக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்க கூடாது; அவ்வாறு இருக்கவும் முடியாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் பல்வேறு மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வில் இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆளுநர் தரப்பில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள், ‘‘தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய 12 மசோதாக்களில் இரண்டை மட்டும் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் பரிந்துரை செய்தது ஏன்? எஞ்சிய 10 மசோதாக்களை 3 ஆண்டுகளாக கிடப்பில் போட்டது ஏன்? இதுதொடர்பாக ஆளுநர் தரப்பில் ஆதாரப்பூர்வமாக விளக்கவேண்டும்’’ என உத்தரவிட்டனர்.