தன்னார்வ சமூக பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

7 months ago 23

 

மதுரை, நவ. 12: தன்னார்வ சமூக பணியாளர் பணிக்கு, விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மதுரை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் மிஷன் வத்சல்யா திட்டத்தை செயல்படுத்தும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தன்னார்வ சமூக பணியாளர்களாக பணியாற்ற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சமூக பணி (அ) சமூகவியல் (அ) குழந்தை மேம்பாடு (அ) உளவியல் ஆகிய ஏதேனும் ஒரு துறையில், அவர்கள் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதேனும் ஒரு இளங்கலை பட்டத்துடன் 3 ஆண்டுகள் குழந்தைகள் கல்வி மற்றும் மேம்பாடு அல்லது பாதுகாப்பு தொடர்பான பணிகள் மேற்கொண்ட அனுபவம் இருக்க வேண்டும். சமூக விசாரணை மேற்கொள்ளுதல், குழந்தைகளுக்கான தனி நபர் பராமரிப்புத் திட்டம் தயாரித்தல், தத்தெடுப்புகளில் குழந்தை ஆய்வு அறிக்கை மற்றும் இல்ல ஆய்வு அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

சமூக பணியாளர் பணியானது முற்றிலும் தன்னார்வத்தின் அடிப்படையில் மட்டுமே நியமனம் செய்யப்படுவது. இந்த பணிக்கு ஊதியமோ, படியோ கிடையாது. ஒதுக்கீடு செய்யப்பட்ட பணி சார்ந்து மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு மட்டும் போக்குவரத்துப்படி மற்றும் தினப்படி வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய பயோடேட்டாவை நவ.30க்குள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் வழங்கலாம்.

The post தன்னார்வ சமூக பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Read Entire Article