சூலூர்: கோவை அருகே ஆசிரியையான மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு கணவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அடுத்துள்ளது பட்டணம் புதூர். இங்குள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (50). இவரது மனைவி சங்கீதா (45). தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு 9 மற்றும் 11ம் வகுப்பு படிக்கும் 2 மகள்கள் உள்ளனர். கிருஷ்ணகுமார், துபாயில் வேலை செய்துவிட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊர் திரும்பினார். இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், மங்களம் கிராமத்தில் உள்ளது. இதனை கவனித்து வந்தார்.
நேற்று காலை தனது தோட்டத்தில் கிருஷ்ணகுமார் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இது பற்றிய தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு போலீசார் வந்தனர். அவர்கள் அங்கு சோதனை மற்றும் விசாரணை நடத்தியபோது கிருஷ்ணகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து கேரள போலீசார் மற்றும் உறவினர்கள் கோவையில் உள்ள கிருஷ்ணகுமாரின் மனைவி சங்கீதாவுக்கு தகவல் கொடுப்பதற்காக அவரை செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் சங்கீதா போனை எடுக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்து வீடு அருகே உள்ளவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கிருஷ்ணகுமாரின் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது வீடு வெளிப்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. சங்கீதாவை அழைத்து பார்த்தனர். ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு சங்கீதா துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இது குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்தனர். கோவை எஸ்பி கார்த்திகேயனும் நேரில் பார்வையிட்டார். சங்கீதாவின் மார்பு பகுதியில் குண்டு பாய்ந்திருந்தது தெரியவந்தது. போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், தோட்ட பணிகளுக்கு பயன்படுத்துவதற்காக உரிமம் பெற்று கிருஷ்ணகுமார் துப்பாக்கி வைத்திருந்ததும், கணவன்-மனைவி இடையே தகராறு இருந்து வந்ததும், நேற்று காலை மீண்டும் தகராறு ஏற்பட்டு துப்பாக்கியால் மனைவியை சுட்டுக்கொன்றுவிட்டு தனது தோப்பிற்கு சென்று அங்கு தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது. குடும்ப தகராறுதான் காரணமா? கடன் தொல்லை அல்லது வேறு ஏதாவது காரணத்தால் இந்த சம்பவம் நடந்ததா? என போலீசார் விசாரிக்கின்றனர்.
* கதறி அழுத மகள்கள்
மனைவியை கொன்று தற்கொலை செய்து கொண்ட கிருஷ்ணகுமாரின் மகள்கள் நேற்று காலை பள்ளி பஸ்சில் பள்ளிக்கு சென்றனர். அதன்பின்னர்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. தந்தையும், தாயும் இறந்த தகவல் தேர்வு முடிந்தபின்னர் தெரிவிக்கப்பட்டது. இரு குழந்தைகளும் இதை கேட்டு கதறி அழுதனர். அவர்களை பொதுமக்கள் மற்றும் போலீசார் அரவணைத்து ஆறுதல் கூறினர்.
The post தனியார் பள்ளி ஆசிரியையான மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்று கணவரும் தற்கொலை: கோவை அருகே பயங்கரம் appeared first on Dinakaran.