சென்னை: வேங்கைவயல் சம்பவத்தில் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே 3 பேர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், வெள்ளானூர் காவல் நிலையத்தில் 26.12.2022ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த குற்றச்சாட்டின் தீவிரத்தையும், சமூக முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் இந்த வழக்கின் புலன் விசாரணையை 14.01.2023 அன்று சிபிசிஐடி-க்கு மாற்றினார். அதைத்தொடர்ந்து, கூடுதல் காவல் துறை இயக்குநர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை உத்தரவின் பேரில், துணை காவல் கண்காணிப்பாளர் நிலையிலான அதிகாரியை புலனாய்வு அதிகாரியாக நியமித்து, புதுக்கோட்டையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையின்போது, புகார்தாரர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டதோடு, ஏராளமான ஆவணங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதைத்தவிர, பல நபர்களின் அலைபேசி எண்கள் மற்றும் தொலைத்தொடர்பு தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. வேங்கைவயல், எறையூர் கிராம மக்களிடம் இதற்கான பல்வேறு காரணங்கள் குறித்தும் விரிவாக விசாரிக்கப்பட்டது. மேலும், அந்த கிராமத்தை சேர்ந்த சில நபர்களிடம் இருந்து உயிரியல் மாதிரிகள் எடுக்கப்பட்டு, விரிவான டிஎன்ஏ பகுப்பாய்வும் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை மற்றும் பகுப்பாய்வுகளின் அடிப்படையில், பின்வரும் விவரங்கள் உறுதி செய்யப்பட்டன:
* சம்பவம் நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, 02.10.2022 அன்று வேங்கைவயலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்காக முத்துக்காடு ஊராட்சி தலைவர் பத்மா என்பவரின் கணவர் முத்தையா கிராமசபை கூட்டத்தின்போது, தமிழ்நாடு காவல் துறை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் காவலர் முரளிராஜாவின் தந்தை ஜீவானந்தத்தை அவமானப்படுத்தும் விதமாக திட்டியுள்ளார். இச்சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் முரளிராஜாவால் இந்த செயல் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது என்பது காவல் துறையின் விசாரணையின் மூலம் ஆதாரப்பூர்வமாக புலனாகியுள்ளது.
* மேலும், சம்பவத்தில் முரளிராஜா, சுதர்ஷன், முத்தையா, ஆர்.முத்துகிருஷ்ணன் மற்றும் பலரின் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு, தமிழ்நாடு தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது, அவற்றில் இந்த சம்பவம் தொடர்பான பல புகைப்படங்களும், உரையாடல்களும் அழிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த தகவல்கள் அனைத்தும் தொழில்நுட்ப உதவியோடு மீட்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில், இந்த சம்பவத்தில் அவர்களுக்குள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டது.
* இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் பெறப்பட்ட புகைப்படங்கள், செல்போன் உரையாடல்கள், வீடியோ ஆதாரங்கள், தடயவியல் அறிக்கை, மருத்துவ அறிக்கைகள், புலனாய்வு அதிகாரியால் செய்யப்பட்ட செயல்முறை விளக்கங்களின் முடிவுகள், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அறிக்கை, வல்லுநர்களின் கருத்துகள் மற்றும் சாட்சிகளின் அறிக்கைகள் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்ததின் அடிப்படையில், புலன் விசாரணை முடிக்கப்பட்டு வேங்கைவயலை சேர்ந்த முரளிராஜா, சுதர்ஷன், முத்துகிருஷ்ணன் ஆகியோரின் மீது, கடந்த 20ம் தேதி நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக தவறான தகவல்களை யாரும் பரப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* வேங்கைவயல் சம்பவம் தொடர்பான விசாரணையில் பெறப்பட்ட புகைப்படங்கள், செல்போன் உரையாடல்கள், வீடியோ ஆதாரங்கள் உள்ளிட்டவை பகுப்பாய்வு செய்யப்பட்டது.
* இதனடிப்படையில் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, வேங்கைவயலை சேர்ந்த முரளிராஜா, சுதர்ஷன், முத்துகிருஷ்ணன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
* எனவே, இதுதொடர்பாக தவறான தகவல்களை யாரும் பரப்பிட வேண்டாம்.
The post தனிப்பட்ட விரோதம்தான் காரணம் வேங்கைவயல் சம்பவத்தில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்: தமிழ்நாடு அரசு வேண்டுகோள் appeared first on Dinakaran.