
மும்பை,
தெற்கு மும்பையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாக்படா பகுதியில் உள்ள டிம்டிம்கர் சாலையில் அமைந்துள்ள பிஸ்மில்லா ஸ்பேஸ் கட்டிடத்தில் இன்று மதியம் இந்த சம்பவம் நடந்துள்ளது.
5 தொழிலாளர்கள் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக உள்ளே சென்றனர். இந்த நிலையில் அவர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது திடீரென மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர். உடனடியாக அங்கு இருந்த பிற தொழிலாளர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அவர்கள் ஐந்து பேரையும் மீட்டு அரசு நடத்தும் ஜேஜே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.