
தஞ்சை,
தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லை டவுனில் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவில் உள்ளது. இங்கு தினமும் உள்ளூர் பக்தர்கள் தவிர ஏராளமான வெளியூர் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கிறார்கள்.மேலும் புதுமண தம்பதிகள், கல்லூரி மாணவ-மாணவிகளும் வந்து வழிபடுவதுடன் செல்போன் மூலம் செல்பி எடுக்கிறார்கள். உள்பிரகார வீதிகள், ரதவீதிகள், இசைத்தூண், கல்தூண்களில் உள்ள சிற்பங்களின் அருகில் நின்றும் புகைப்படம், வீடியோ எடுத்து செல்கிறார்கள். இதற்கு பெரிதாக கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படுவதில்லை.இவ்வாறு கோவில், சுற்றுலா தலங்களில் எடுக்கும் புகைப்படங்களை சிலர் தங்களது நண்பர்களுக்கு பகிர்வதுடன், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றமும் செய்கிறார்கள். இதேபோல் நெல்லையப்பர் கோவிலுக்கு வந்த ஒரு மாணவரும், மாணவியும் சேர்ந்து அம்பாள் சன்னதி அருகே நின்று நடனமாடி வீடியோவாக பதிவு செய்தனர். பின்னர் அதனை பிரபல பாடலுடன் இணைத்து 'ரீல்ஸ்' வீடியோவாக சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தனர்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால், பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து கோவில் நிர்வாக அலுவலர் அய்யர் சிவமணி நேற்று நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புனிதமிக்க இடமான சுவாமி நெல்லையப்பர் கோவில் வளாகத்தில் 'ரீல்ஸ்' வீடியோ எடுத்து வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தார்.
இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களை தேடி வருகிறோம் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே நெல்லையப்பர் கோவிலில் நடனமாடி 'ரீல்ஸ்' வீடியோ ெவளியிட்ட மாணவரும், மாணவியும் நேற்று தங்களது செயலுக்கு மன்னிப்பு கேட்டு மற்றொரு வீடியோ வெளியிட்டனர். அதில், ''நெல்லையப்பர் கோவிலில் நடனமாடி வீடியோ எடுத்ததற்கும், அதை வெளியிட்டதற்கும் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம். அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கி விட்டோம். இனிமேல் இது போன்ற இடங்களில் வீடியோ எடுக்க மாட்டோம்''என்று தெரிவித்தனர்
இந்தநிலையில் அதேபோல, தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள தஞ்சை பெரிய கோவில் மிகவும் புகழ் பெற்றது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் வெளிநாட்டினர், அண்டை மாநிலங்கள், உள்ளூரில் இருந்து பொதுமக்கள் வருகை தருகின்றனர். அந்த வகையில் கோடை விடுமுறை தற்பொழுது அறிவித்துள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாகி உள்ளது. அந்த வகையில் இளம் பெண்கள் சிலர் தஞ்சை பெரியகோவிலுக்கு வந்துள்ளனர். அப்போது கோவிலின் நுழைவாயிலில் சினிமா பாடலுக்கு ரீல்ஸ் எடுத்துள்ளனர். அதனை தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டனர்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. தமிழர்களுடைய பெருமைக்கும், சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் தஞ்சை பெரியகோவிலில் முகம் சுளிக்கவைக்கும் வகையில் இரண்டு பெண்கள் நடனமாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இது குறித்து காவல்துறையினர் விசாரணை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது இந்த வீடியோ தமிழ்புத்தாண்டு அன்று எடுத்தது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசராணை மேற்கொண்டு வருகின்றனர்.பொதுவாக கோவில்களில் செல்போன் , மற்றும் கேமிரா உள்ளிட்ட பொருள்கள் எடுத்து செல்ல கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் இந்த விவகாரம் பேசுப்பொருளாகி உள்ளது. மேலும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பி உள்ளது. ஏற்கெனவே கோவில்களில் சிறுவர்கள் சிலர் ரீல்ஸ் எடுத்து பதிவிட்ட நிலையில் இது தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.