
தஞ்சாவூர்,
தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருவதோடு, தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
18 நாட்கள் நடைபெறும் இந்த சித்திரை திருநாளில் 15-வது நாள் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சாமி புறப்பாடு மற்றும், விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்று வந்தன.
இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (புதன்கிழமை) காலை 5.30 மணியளவில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ரூ.50 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட இந்த தேரின் பின்புறம் நந்தி மண்டப தோற்றம் ஒரே பலகையில் அமைக்கப்பட்டுள்ளது. தேரில் 245 மணிகள் பொருத்தப்பட்டுள்ளன.
தேரின் அச்சு 2 டன் எடையும், சக்கரங்கள் ஒவ்வொன்றும் தலா 1 டன் எடையும் கொண்டது. தேரின் மொத்த எடை சாதாரணமாக 40 டன் ஆகும். தேர் அலங்காரத்திற்கு பின் 43 டன் எடையாகும். தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.