தஞ்சை பகுதியில் இறவை எள் பயிர்களில் குழாய் மூலம் தண்ணீர் தெளிப்பு

2 hours ago 1

தஞ்சாவூர் : தஞ்சாவூர் அருகே வேங்கராயன் குடிகாட்டில் சாகுபடி செய்யப்பட்டுள்ள எள் பயிருக்கு தண்ணீர் பாய்ச்சும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்னர்.

தஞ்சை மாவட்டம், வேங்கராயன் குடிகாட்டில் விவசாயிகள் அதிகளவில் எள் சாகுபடி செய்துள்ளனர். இரவு முதல் காலையில் நீண்ட நேரம் பனியும், பகலில் வெயில் என்று மாறி, மாறி உள்ளது.

இதனால், எள் செடிகள் வாடி விடக்கூடாது என்பதற்காக விவசாயிகள் பம்ப் செட்டில் ஹோஸ் பைப் இணைத்து எள் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். எள் பயிருக்கு தண்ணீர் அதிகம் தேங்கி நிற்கக்கூடாது என்பதால் இவ்வாறு விவசாயிகள் சாகுபடி பணிகளை செய்து வருகின்றனர்.இறவைப்பட்டம் எள் சாகுபடி:

இந்நிலையில் எள் பயிர் சாகுபடியில் உள்ள தொழில் நுட்பங்கள் குறித்து வேளாண் துறை விவசாயிகளுக்கு ஆலோசனை அளித்துள்ளது. எள் பயிர் இறவை பட்டத்தில் அதிக மகசூல் கொடுப்பதால் இறவை எள் சாகுபடி செய்வது சிறந்தது.

இதற்கு அதிக நீர் தேவையில்லை. மேலும் இப்பயிர் அதிக வெப்பத்தை தாங்கும் சக்தி கொண்டது. இறவை பட்டம்: மாசி, பங்குனி மற்றும் சித்திரை, ரகங்கள்: டி எம் வி 3, 4,6, 7 விஆர்ஐ 2, எஸ்விபிஆர் 1 ஒரு ஏக்கருக்கு தேவையான 2 கிலோ விதையை மணலுடன் கலந்து சீராக தூவ வேண்டும்.

இடைவெளி 30 சென்டிமீட்டருக்கு 30 சென்டிமீட்டர் இருக்க வேண்டும். ஒரு சதுர மீட்டரில் 11 செடிகள் இருக்குமாறு பராமரிக்க வேண்டும். ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் கார்பெண்டசிம் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடியுடன் இரண்டு பாக்கெட் இதர பயிர்கள் அசோஸ்பைரில்லம் கலந்து விதைக்க வேண்டும், இதன் மூலம் விதை வழியாக பரவும் நோய்களை கட்டுப்படுத்தலாம். அசோஸ்பைரில்லம் இடுவதன் மூலம் தழைச்சத்து இடுவதை குறைத்துக் கொள்ள முடியும்.

பாசன வசதி உள்ள இடங்களில் ஏக்கருக்கு இரண்டு கிலோ மாங்கனீசு சல்பேட், 20 கிலோ மணலுடன் கலந்து தூவ வேண்டும். ரசாயன உரங்கள் மானாவாரி நிலமாக இருந்தால் ஏக்கருக்கு யூரியா 20 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 30 கிலோ, பொட்டாஷ் 10 கிலோ இடவேண்டும்.இறவை பாசனமாக இருந்தால் யூரியா 30 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 60 கிலோ, பொட்டாஷ் 15 கிலோ இட வேண்டும். நெல் பயிருடன் போட்டி போட்டுக் கொண்டு வளர்வது களைகள்.

இவைகள் சத்துக்களை எடுத்துக் கொண்டு எள் பயிரின் மகசூலை பெரிதும் பாதிக்கிறது. இவற்றில் நாய் கடுகு, சாரனை, பூண்டு ஆகியவை எள் சாகுபடி செய்யும் நிலத்தில் பெரிதளவில் முளைக்கிறது. இவ்வகை களைகளை எள் விதைத்த 40 நாட்கள் வரை கட்டுப்படுத்தினாலே பயிரின் மகசூலை அதிகரிக்க முடியும்.

களை மேலாண்மை:
எள் விதைத்த மூன்றாம் நாள் மண்ணில் ஈரம் இருக்கும் தருணத்தில் அலக்குலோர் ஏக்கருக்கு 500 மில்லி அளவில் மணலில் கலந்து இடவேண்டும் அல்லது கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து களையைக் கட்டுப்படுத்தலாம்.பயிர் கலைதல் என்பது எள் சாகுபடியில் முக்கிய தொழில்நுட்பமாகும்.

எள் விதைத்த 15 நாட்கள் கழித்து செடிக்கு செடி 15 சென்டிமீட்டர் இடைவெளி இருக்குமாறும், பின் பத்து நாட்கள் கழித்து செடிக்கு செடி 30 சென்டிமீட்டர் இருக்கும் படியும் பயிர்களை கலைத்து இடவேண்டும் பயிர்களை கலைத்து விடுவதால் செடிகள் நன்கு வளரும்.

செடிகளின் கிளைகள் அதிகரிக்கும்.. செடிகளுக்கு காற்றோட்டமும் சூரிய வெளிச்சமும் அதிகமாக கிடைக்கும். இதனால் செடிகளில் பூக்களும், காய்களும் கிளைகளின் அடிபாகத்தில் இருந்தே தோன்றுகிறது இதன் மூலம் மகசூல் அதிகரிக்கும்.எள்செடி ஐந்து இலை விடும்போது நீர் பாய்ச்சுவதும் பிறகு பூவும் காயும் தோன்றும் போது நீர் பாய்ச்சுவதும் போதுமானது. மேலும் மண்ணின் ஈரத்தன்மையை அறிந்து நீர் பாய்ச்சுவதும் சிறந்தது.

எள் செடி பூக்காத குறையை நிவர்த்தி செய்ய எள் விதைத்த நாற்பதாம் நாள் பியானோ பிக்ஸ் 40 பிபிஎம் 150 மில்லி ஏக்கருக்கு மற்றும் டிஏபி ஒரு சத கரைசலையும் சேர்த்து மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.எள் செடிகளில் காய் நாவாய் பூச்சி தாக்குதலால் மகசூல் மற்றும் விதையின் தரம் பாதிக்கப்படுகிறது.

இதனை கட்டுப்படுத்த காய் பிடிக்கும் முதிரும் தருணத்தில் சேதம் அதிகம் இருப்பின் டை குளோர் வாஸ் மருந்து ஏக்கருக்கு 200 மில்லி வீதம் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். சாம்பல் நோயை கட்டுப்படுத்த நனையும் கந்தகம் ஒரு கிலோ வீதம் தெளித்து கட்டுப்படுத்தலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தஞ்சை பகுதியில் இறவை எள் பயிர்களில் குழாய் மூலம் தண்ணீர் தெளிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article