தஞ்சாவூர்: கலைகளுக்கு பேர் போனது சோழ மண்டலம். இங்கு உருவான மற்றும் வளர்க்கப்பட்ட கலைகள் யாவும் ஆன்மீகத்தை அடி நாதமாக கொண்டே பேணி பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் ஒன்று தான் சிற்பக்கலை. நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் பல்லவர்களும், பாண்டியர்களும் போற்றி வளர்த்த கலை மரபை, அவர்களுக்கு பின்பு வந்த பிற்கால சோழர்களும் தொடர்ந்து ஆதரித்ததால், அது மேலும் வளர்ச்சி அடைந்தது. குறிப்பாக, ஐம்பொன் சிலை வடிவமைப்பில் சோழர் காலத்துக்கு இணையாக வேறு எதுவும் இல்லை எனும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதனால் தான் டெல்டா மாவட்டங்களில் கிடைக்கபெறும் ஐம்ெபான் சிலைகள் பொக்கிஷமாக பார்க்கப்படுகின்றன. அந்த வகையில் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் 1951ம் ஆண்டில் இருந்து 1985ம் ஆண்டு வரையிலான சோழர் காலம் மற்றும் நாயக்கர் காலத்தை சார்ந்த 250 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
இவை அனைத்தும் 9ம் நூற்றாண்டில் இருந்து 16ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தை சார்ந்தவை என்று கூறப்படுகிறது. இந்த அரிய சிலைகளை பாதுகாப்பதற்காகவும், இவற்றின் வரலாற்று தொன்மையை வரும் சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கும் நோக்கிலும் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. இவை ஒரே இடத்தில் தஞ்சாவூர் அரண்மனை கலைக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நடராஜர் சிலைகளுக்கு மட்டுமே தனி அரங்கம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திறக்கப்பட்டது. இந்த தனி அரங்கில் நடராஜர் சிலைகளுடன் சிவகாமி சிலைகளையும் சேர்த்து 32 சிலைகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் செம்பு, பித்தளை, ஈயம், தங்கம், வெள்ளி ஆகிய ஐம்பொன்னால் வார்க்கப்பட்ட சிலைகள். இச்சிலைகளில் வேலைப்பாடு மிக நுணுக்கமாக உள்ளது. இதை பிற்காலத்தில் வந்த வேறு எந்த சிலைகளிலும் காண முடியாது.
ஆனந்த தாண்டவ கோலத்தில் காணப்படும் இச்சிலைகள் வலது கால் தரையில் ஊன்றப்பட்ட நிலையிலும், இடது கால் தூக்கிய நிலையிலும் இருக்கின்றன. இந்த அரங்கில் வைக்கப்பட்டுள்ள 10ம் நூற்றாண்டை சேர்ந்த கண்ணப்பநாயனார் சிலை மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கண்ணப்பநாயனாரின் கையில் தனது ஒரு கண்ணும், அவரது 2 கால்களிலும் நவீன காலத்தில் மக்கள் பயன்படுத்தக்கூடிய காலனி அணிந்திருப்பது போலவும் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. 1000 ஆண்டுகளுக்கு முன்பே காலணி அணிந்திருப்பது போன்று உருவாக்கப்பட்ட சிற்பம் தமிழர்களின் அப்போதைய நாகரீக வளர்ச்சியை பறைசாற்றுகிறது. அதேபோல், 10, 11ம் நூற்றாண்டை சார்ந்த ‘விழித்து மூடுதல்’ சிலை மிக அரிதானது. ஒவ்வொரு கரமும் பார்த்தல், காத்தல், அழித்தல், அருளல் ஆகியவற்றை உணர்த்தும் விதமாக இருக்கிறது.
இறைவன் இயங்கி கொண்டிருக்கிறார் என்பதை காட்டும் விதமாக வார்க்கப்பட்டிருப்பது மிகவும் தத்ரூபமாக உள்ளது. இதேபோல, இடுப்பில் கட்டப்பட்டுள்ள கச்சை பறந்து விரிந்திருப்பதும் மிக நேர்த்தியாக இருக்கிறது. சடையில் காணப்படும் கங்கை, மூன்றாம் பிறை, தலையின் உச்சியில் எலும்புக் கூடு, மூன்று இழைகளின் பூ நூல்கள், புலித்தோல் ஆடை, வலது காதில் மகர குண்டலம், இடது காதில் காதோலை போன்றவை மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அறியாமையை விட்டொழித்து இறைவனை மட்டுமே சிந்தித்து விழிப்புடன் இருந்தால் துன்பம் நேராது என்ற தத்துவத்தை உணர்த்துகிறது இச்சிலை. இதேபோல், 11 மற்றும் 12ம் நூற்றாண்டை சார்ந்த சிவகாமி சிலையில் கழுத்தில் உள்ள ஆபரணங்கள், கையில் வளையல், நகம், காலில் மகர கொலுசு, ஆடையில் பூ வேலைப்பாடு, வரி வடிவம், சடை, சிரச்சக்கரம், மூக்கு, வாய், கன்னம், நெற்றி போன்றவை மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. எந்தவித தொழில்நுட்பமும் இல்லாத பழங்காலத்திலேயே கலை நுணுக்கத்தோடு இந்த சிலைகள் வடிவமைக்கப்பட்டிருப்பது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.
இந்த அரங்கத்துக்கு அடுத்துள்ள தர்பார் கூடத்தில் சோழர் மற்றும் நாயக்கர் காலத்தை சார்ந்த சிவன், விஷ்ணு உள்பட 103 சிலைகள் இடம்பெற்றுள்ளன. இதில், சோழர் காலத்துக்கு உட்பட்ட 11, 12ம் நூற்றாண்டை சார்ந்த ரிஷப வாகன தேவர் சிலையில் தலையில் முடி, மகுடத்தில் பாம்பு படம் எடுத்த நிலை, எருக்கம்பூ சூடியிருப்பது, அழகாக நின்று ரிஷபரின் மீது கை வைத்திருக்கும் பாணி, போன்ற சிலைகள் மிகவும் தத்ரூபமானவை. மிக அரிதான இச்சிலை வேறு எங்கும் இருப்பதாக தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொரு சிலையும் தனித்தனியாக கண்ணாடி பெட்டியில், மின்னொளியில் ஜொலிக்கும் விதமாக வைத்து பராமரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு சிலையின் கீழும் அதனுடைய காலம், கண்டெடுக்கப்பட்ட இடம், அச்சிலையில் காணப்படும் சிறப்புகள் போன்ற விவரங்கள் பார்வையாளர்கள் அறிந்து கொள்வதற்காக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரிய சிலைகளை தினமும் ஏராமான சுற்றுலா பயணிகள் பிரமிப்புடன் கண்டு ரசித்தும், பக்தியுடன் வணங்கியும் செல்கின்றனர். இதுதவிர உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்.
* எந்தவித தொழில்நுட்பமும் இல்லாத பழங்காலத்திலேயே கலை நுணுக்கத்தோடு இந்த சிலைகள் வடிவமைக்கப்பட்டிருப்பது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.
* இந்த அரங்கத்துக்கு அடுத்துள்ள தர்பார் கூடத்தில் சோழர் மற்றும் நாயக்கர் காலத்தை சார்ந்த சிவன், விஷ்ணு உள்பட 103 சிலைகள் இடம்பெற்றுள்ளன.
The post தஞ்சாவூர் அரண்மனை கலைக்கூடத்தில் தனி அரங்கத்தில் ஜொலிக்கும் நடராஜர் சிலைகள்: பிரமிப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.