
சென்னை,
நடப்பாண்டின் முதல் காலாண்டான ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 118.1 டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 15 சதவீதம் குறைவு. உலக தங்க கவுன்சில் இத்தகவலை தெரிவித்துள்ளது. இருப்பினும், விலை கடுமையாக உயர்ந்து இருப்பதால், விற்கப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.94 ஆயிரத்து 30 கோடியாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட 22 சதவீதம் அதிகம்.
2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தங்கத்தின் விலை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த காலாண்டில் தங்கத்தின் சராசரி விலை 10 கிராமுக்கு 79 ஆயிரத்து 633 ஆக இருந்தது. ''தங்கத்தின் விலை உயர்ந்ததால், அதை வாங்குவது குறைந்துள்ளது. இருப்பினும், அக்ஷய திருதியை, திருமண சீசன் போன்ற காரணங்களால், தொடர்ந்து தங்கம் வாங்கி வருகிறார்கள்'' என்று உலக தங்க கவுன்சில் இந்திய தலைவர் சச்சின் ஜெயின் தெரிவித்தார். இருப்பினும், உலக அளவிலான தங்கத்தின் தேவை 1 சதவீதம் அதிகரித்துள்ளது. 1,206 டன் தங்கம் விற்பனை ஆகியுள்ளது.