
சென்னை,
ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத் ஆகியோர் நடித்த '3 பி.எச்.கே.' இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ந் தேதி வெளியாக உள்ளது. சென்னையில் நடந்த இதன் பட விழாவில் முன்னணி நடிகரான ரவி மோகன் கலந்து கொண்டார்.
விழாவில் ரவி மோகன் பேசும்போது, "எல்லோருக்கும் சொந்த வீடு என்பது மிகப்பெரிய கனவு. லட்சியம் என்று கூட சொல்லலாம். நான் என் வாழ்க்கையில் வாடகை வீட்டில் இருந்ததே கிடையாது. பிறந்ததில் இருந்து சொந்த வீட்டில் தான் வசித்து வந்தேன். அதனால் வாடகை வீட்டில் குடியிருப்போரின் மனநிலை எப்படி இருக்கும்? என்பது கூட தெரியாது. ஆனால் இப்போது வாடகை வீட்டில் இருக்கிறேன். விரைவில் எல்லாம் மாறும் என்று நினைக்கிறேன்.
'3 பி.எச்.கே.' போன்ற படங்கள் எனக்கு மிகப்பெரிய தூண்டுதலாக அமைகின்றன. வாடகை வீட்டில் இருக்கும் கஷ்டத்தை உணர்த்துகின்றன. மீண்டும் என் வாழ்க்கையை நல்லபடியாக மாற்றி அமைப்பேன் என்று தோன்றுகிறது", என்று உருக்கமாக குறிப்பிட்டார்.
மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து ரவி மோகன் தற்போது தனியே வாழ்ந்து வரும் வேளையில், அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.