
லாகூர்,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 2-வது அரையிறுதியில் நியூசிலாந்தும், தென் ஆப்பிரிக்காவும் ஆடின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அந்த அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 362 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா (108), வில்லியம்சன் (102) ஆகியோர் சதம் அடித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் லுங்கி என்கிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
363 ரன் எடுத்தால் வெற்றி மட்டுமின்றி இறுதிப்போட்டிக்கும் முன்னேறலாம் என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா களம் புகுந்தது. தென் ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர்களாக ரிக்கெல்டன் மற்றும் தெம்பா பவுமா களம் இறங்கினர். இதில் ரிக்கெல்டன் 17 ரன்னில் அவுட் ஆனார்.
இதன்பின்னர் பவுமாவுடன் கைகோர்த்த வான் டெர் டுசென் அடித்து விளையாடி, அரைசதம் எடுத்தனர். இதில் பவுமா 56 ரன்களிலும், வான் டெர் டுசென் 69 ரன்களிலும் அவுட் ஆனார்கள். இதனையடுத்து களம் இறங்கிய மார்க்ரம் 31 ரன், கிளாசென் 3 ரன், வியான் முல்டர் 8 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இதன்பின்பு, அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர் - மார்கோ ஜான்சென் ஜோடி சேர்ந்தனர். இதில் ஜான்சென் 3 ரன்களிலும், அடுத்து வந்த மஹராஜ் 1 ரன்களிலும், ரபடா 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுபுறம் மில்லர் 67 பந்துகளில் (10 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) ஆட்டமிழக்காமல் சதம் அடித்து அசத்தினார். நியூசிலாந்து தரப்பில் சான்ட்னர் 3 விக்கெட்டுகளும், ஹென்றி மற்றும் பிலிப்ஸ் தலா 2 விக்கெட்டுகளும், ரவீந்திரா மற்றும் பிரேஸ்வெல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தென் ஆப்பிரிக்க அணி, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 312 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், மில்லர் சதம் அடித்தபோதும், நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இறுதி போட்டிக்கும் முன்னேறியுள்ளது. இதனால், அந்த அணி ஞாயிற்று கிழமை நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாட உள்ளது.