டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் கங்குலியை சமன் செய்த ஜடேஜா

4 hours ago 2

லண்டன்,

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் தலா 387 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆகின. பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3-வது நாள் முடிவில் ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 2 ரன் எடுத்திருந்தது.

இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 2-வது இன்னிங்சில் 62.1 ஓவர்களில் 192 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஜோ ரூட் 40 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதன் மூலம் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 4-வது நாள் முடிவில் 17.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 58 ரன்கள் அடித்திருந்தது. கே.எல். ராகுல் 33 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இந்தியாவின் வெற்றிக்கு 135 ரன் தேவை. அதே சமயம் இங்கிலாந்து வெற்றிக்கு 6 விக்கெட் தேவை என்ற பரபரப்பான சூழலில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் இந்திய அணிக்கு ஜடேஜா மட்டுமே நம்பிக்கை அளிக்கும் வகையில் பேட்டிங் செய்து வருகிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பண்ட் 9 ரன்களிலும், ராகுல் 39 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இந்திய அணிக்கு இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே மீதமுள்ள நிலையில் ஜடேஜா மட்டும் தனி ஆளாக போராடி வருகிறார். முகமது சிராஜ் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.

பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜடேஜா அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். இந்த தொடரில் அவர் தொடர்ச்சியாக அடித்த 4-வது அரைசதம் இதுவாகும். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து மண்ணில் தொடர்ச்சியாக அதிக அரைசதங்கள் அடித்த இந்திய வீரர்களின் மாபெரும் சாதனை பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த சவுரவ் கங்குலியை (4 முறை) சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் ரிஷப் பண்ட் (5 முறை) முதலிடத்தில் உள்ளார்.

தற்போது வரை இந்திய அணி 70 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் அடித்துள்ளது. ஜடேஜா 56 ரன்களுடனும், சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா வெற்றி பெற இன்னும் 30 ரன்கள் அடிக்க வேண்டும். தற்போது தேநீர் இடைவேளை விடப்பட்டுள்ளது. 

Read Entire Article