டெஸ்ட் கிரிக்கெட்: சதத்தில் மட்டுமல்ல... தோனியின் மற்றொரு சாதனையையும் தகர்த்த பண்ட்

6 hours ago 2

லீட்ஸ்,

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 359 ரன்கள் குவித்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் 127 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 65 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஜெய்ஸ்வால் 101 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்த சூழலில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. சுப்மன் கில், ரிஷப் பண்ட் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். சிறப்பாக ஆடிய இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டினர். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பண்ட் சிக்சர் அடித்து தனது சதத்தை பூர்த்தி செய்தார்.

பண்ட் சதமடித்த சிறிது நேரத்திலேயே கில் 147 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கருண் நாயர் டக் அவுட்டில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரைதொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பண்ட் 134 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ஷர்துல் தாகூர் ஒரு ரன்னில் நடையை கட்டினார்.

தற்போது உணவு வேளை விடப்பட்டுள்ளது. இந்திய அணி 108.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 454 ரன்கள் குவித்துள்ளது. ஜடேஜா 2 ரன்களுடன் களத்தில் உள்ளார். இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

இந்த இன்னிங்சில் ரிஷப் பண்ட் மொத்தம் 6 சிக்சர்கள் விளாசினார். இதனையும் சேர்த்து டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பண்ட் இதுவரை 79 சிக்சர்கள் விளாசியுள்ளார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்சர் விளாசிய 3-வது வீரர் என்ற மகேந்திரசிங் தோனியின் (78 சிக்சர்கள்) சாதனையை தகர்த்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. சேவாக் - 90 சிக்சர்கள்

2. ரோகித் சர்மா - 88 சிக்சர்கள்

3. பண்ட் - 79 சிக்சர்கள்

4. மகேந்திரசிங் தோனி - 78 சிக்சர்கள்

ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற மகேந்திரசிங் தோனியின் (6 முறை) சாதனையை தகர்த்த பண்ட் (7 முறை) தற்போது மற்றொரு சாதனையையும் காலி செய்துள்ளார். 

Read Entire Article