
லீட்ஸ்,
இங்கிலாந்துக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்- தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நேற்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 113 ஓவர்களில் 471 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 147 ரன்களும், ரிஷப் பண்ட் 134 ரன்களும், ஜெய்ஸ்வால் 101 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஷ் டங் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது. இதன்படி இங்கிலாந்து அணியின் சார்பில் ஜாக் க்ருவ்லி மற்றும் பென் டக்கெட் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் ஜாக் க்ருவ்லி 4 ரன்னில் பும்ரா வேகத்தில் வெளியேறினார்.
அடுத்ததாக பென் டக்கெட்டுடன் ஓலி போப் ஜோடி சேர்ந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி அணியின் ரன் ரேட்டை சீரான வேகத்தில் உயர்த்தியது. இந்த ஜோடியில் இருவரும் அரை சதம் கடந்தநிலையில் பென் டக்கெட் 62 (94) ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார்.
அதனைத்தொடர்ந்து ஓலி போப்புடன் ஜோ ரூட் இணைந்தார். இந்த ஜோடியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஓலி போப், சதத்தை பதிவு செய்து அசத்தினார். இந்த நிலையில் இந்த ஜோடியில் ஜோ ரூட் 28 ரனக்ளில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
இதனைத்தொடர்ந்து 2-ம் நாள் ஆட்டம் நிறைவடைந்தது. 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 49 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்தது. ஓலி போப் 100 ரன்களும், ஹேரி புரூக் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இந்திய அணியின் சார்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தற்போது இங்கிலாந்து அணி, இந்திய அணியை விட 262 ரன்கள் பின் தங்கி உள்ளது.
நாளை 3-ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.