
பர்மிங்காம்,
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 151 ஓவர்களில் 587 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக இந்திய கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 3 விக்கெட்டும், ஜோஷ் டாங்கு, கிறிஸ் வோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 89.3 ஓவர்களில் 407 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. விக்கெட் கீப்பர் ஜேமி சுமித் 184 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஹாரி புரூக் 158 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய தரப்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டும் சாய்த்தனர்.
பின்னர் 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்து மொத்தம் 244 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. கே.எல். ராகுல் 28 ரன்களுடனும், கருண் நாயர் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 2-வது இன்னிங்சில் 83 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 427 ரன்கள் அடித்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 161 ரன்கள் அடித்தார். இதனையடுத்து இலக்கை நோக்கி இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது.
இந்த ஆட்டத்தில் சுப்மன் கில் முதல் இன்னிங்சில் 269 ரன்களும், 2-வது இன்னிங்சில் 161 ரன்களும் அடித்துள்ளார். இதன் மூலம் சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 150+ ரன்கள் அடித்த வீரர் என்ற ஆலன் பார்டரின் மாபெரும் சாதனையை சமன் செய்துள்ளார். இந்த சாதனையை ஆலன் பார்டர் (150 மற்றும் 153 ரன்கள்) 1980-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக படைத்திருந்தார். அவரின் இந்த 45 ஆண்டு கால சாதனையை சுப்மன் கில் சமன் செய்துள்ளார்.