
புதுடெல்லி,
இந்தியாவில், முறையான அனுமதியின்றி, ஆவணங்கள் எதுவுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த பலர் தங்கி வருகின்றனர். இதுபோன்று சட்டவிரோத வகையில் வசிக்கும் அவர்களை கண்டறிந்து சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், டெல்லியில் பல ஆண்டுகளாக சட்டவிரோத வகையில் வசித்து வந்த வங்காளதேச நாட்டை சேர்ந்த 66 பேரை டெல்லி போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
வடமேற்கு டெல்லியில் முறையான ஆவணங்கள் எதுவுமின்றி அவர்கள் வசித்து வந்திருக்கின்றனர். அவர்கள் இந்தியாவுக்குள் சட்டவிரோத வகையில் நுழைந்துள்ளனர். அதனுடன், விசா மற்றும் குடியுரிமை விதிகளை மீறி வசித்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து, அவர்களை நாடு கடத்தும் நடைமுறை தொடங்கியுள்ளது.
இதற்காக ஆவணங்களை சரிபார்க்கும் பணியும் நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர், அவர்கள் வங்காளதேசத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என மூத்த காவல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.