திருச்செங்கோடு, ஏப். 11: திருச்செங்கோடு அருகே, டூவீலர் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில், தொழிலாளி தூக்கி வீசப்பட்டு டிரான்ஸ்பார்மரில் மோதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திருச்செங்கோடு அடுத்த திம்மராவுத்தன்பட்டி அடுத்த மேட்டுப்பாளையம் சடையகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் நவீன்குமார்(21), லாரி பாடி கட்டும் பட்டறையில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், வேலை முடிந்து தனது வீட்டிற்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். வழியில் தனியார் திருமண மண்டபம் அருகே வந்த போது, பின்னால் அதிவேகமாக வந்த கார், அவரது டூவீலர் மீது மோதியது. இதில் 300 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட நவீன்குமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டிரான்ஸ்பார்மரில் அவரது உடல் தொங்கியபடி கிடந்தது. மேலும், விபத்தை ஏற்படுத்திய கார் மோதியதில், டிரான்ஸ்பார்மர் உடைந்து, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
விபத்தை கண்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்த போது, காரில் இருந்தவர்கள் கீழே இறங்கி தப்பியோடி விட்டனர். பிரதீப் (25)என்பவர் மட்டும் சிக்கிக் கொண்டார். இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடம் வந்த திருச்செங்கோடு டவுன் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன், டிரான்ஸ்பார்மரில் தொங்கி கொண்டிருந்த நவீன்குமாரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய பிரதீப்பை கைது செய்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து, பிரதீப் மற்றும் அவரது நண்பர்கள் குடிபோதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தினார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட பிரதீப், பள்ளிபாளையம் அடுத்த ஐந்துபனை பகுதியை சேர்ந்தவர் என்பதும், டிப்ளமோ முடித்து விட்டு வேலை தேடி வந்ததும், கருவேப்பம்பட்டியில் மாரியம்மன் திருவிழாவுக்கு சென்று விட்டு, நண்பர்களை கல்லூரியில் இறக்கி விட காரை ஓட்டி வந்த போது, விபத்தை ஏற்படுத்தியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
The post டூவீலர் மீது கார் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.