டிவி.யில் மட்டுமே பார்த்த சர்வதேச விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்தி காட்டியவர் உதயநிதி: அமைச்சர் அன்பரசன் பெருமிதம்

4 months ago 9

ஆலந்தூர்: டிவி.யில் மட்டுமே பார்த்த சர்வதேச விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திக் காட்டியவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமித்துடன் கூறினார். நங்கநல்லூரில் உள்ள பினாக்கிள் ஸ்போட்ஸ் கிளப் மற்றும் லட்சுமிநகர் ஸ்போட்ஸ் கிளப் சார்பில் 26ம் ஆண்டு மாநில அளவிலான பள்ளி மாணவர்கள், மாணவியர்களுக்கான வாலிபால் போட்டி நங்கநல்லூர் லட்சுமி நகர் மைதானத்தில் நடந்தது. 3 நாட்கள் நடந்த இந்த போட்டி நிறைவிழா நடந்தது. விழாவிற்கு போட்டியின் ஒருங்கிணைப்பாளர் அழகேசன் தலைமை வகித்தார். ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன், வார்டு கவுன்சிலர் துர்கா தேவி நடராஜன் முன்னிலை வகித்தனர்.

ஆலந்தூர் நிதிநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனிவாசன் வரவேற்றார். இறுதிப் போட்டியை காவல்துறை கூடுதல் டிஜிபி தினகரன் தொடங்கி வைத்தார். பரிசளிக்கும் விழா மாலையில் நடந்தது. இதில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு மாணவர்களுக்கான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற கொட்டிவாக்கம் ஒ.எம்.சி.ஏ அணிக்கும், பள்ளி மாணவிகளுக்கான இறுதி போட்டியில் வெற்றி பெற்ற மயிலாப்பூர் லேடி சிவசாமி மகளிர் மேல்நிலைப்பள்ளி அணிக்கும் அனைத்து பிரிவினருக்கான மகளிர் இறுதி போட்டியில் வெற்றி பெற்ற உள்ளூர் பினாக்கிள் ஸ்போர்ட்ஸ் கிளப் மகளிர் அணிக்கும் ரொக்க பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கி பேசினார்.

அவர் பேசியதாவது: விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது, 12 ஆயிரம் கிராமங்களுக்கும் 33 விளையாட்டுகளின் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையாட்டு அரங்கம் அமைக்க நிதி ஒதுகீடு செய்து பணிகள் நடந்து வருகிறது. டிவியில் மட்டுமே பார்த்த சர்வதேச போட்டிகளான சதுரங்கம், கார் பார்முலா-4 உள்ளிட்ட சர்வதேச விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திக் காட்டி பெருமை சேர்த்தவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். இவ்வாறு அவர் பேசினார்.

The post டிவி.யில் மட்டுமே பார்த்த சர்வதேச விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்தி காட்டியவர் உதயநிதி: அமைச்சர் அன்பரசன் பெருமிதம் appeared first on Dinakaran.

Read Entire Article