தெஹ்ரான்:
ஈரானுக்கு எதிராக அதிகபட்ச பொருளாதார அழுத்தம் என்ற கடுமையான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதற்கான நிர்வாக உத்தரவுகளில் நேற்று கையெழுத்திட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தவும், ஈரான் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் தடைகளை மீண்டும் தொடரவும் இந்த உத்தரவில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், ஈரான் மீதான தடைகளை விதிக்க விரும்பவில்லை என்றும் ஈரானுடன் ஒப்பந்தத்தை எட்ட விரும்புவதாகவும் டிரம்ப் கூறியிருந்தார்.
டிரம்பின் புதிய உத்தரவைத் தொடர்ந்து ஈரானின் கரன்சி மதிப்பானது வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. அதாவது, அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் ரியால் 850,000 ஆக சரிந்தது.
முன்னதாக, வெளிநாட்டு உதவிக்கான செலவினங்களை முடக்குவது, சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தை மறுசீரமைப்பது அல்லது அதை முடிவுக்கு கொண்டு வருவதற்கு டிரம்ப் எடுத்த நடவடிக்கைகளுக்கு, ஈரானிய அரசு ஊடகத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.