
பெங்களூரு,
பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் முனிரத்னா. இவர், துணை முதல்-மந்திரியும், பெங்களூரு வளர்ச்சித்துறை மந்திரியுமான டி.கே.சிவக்குமார் மீது அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் முனிரத்னா எம்.எல்.ஏ. கூறி இருப்பதாவது:-
பெங்களூரு நகரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வளர்ச்சி திட்டங்கள் ரூ.2 ஆயிரம் கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த பணிகளை ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கானா மாநில முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியின் உறவினர்களுக்கு, வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தத்தை வழங்க முடிவு செய்துள்ளனர். இந்த ஒப்பந்தத்திற்காக அந்த மாநிலங்களின் முதல்-மந்திரிகளின் உறவினர்களிடம் இருந்து 15 சதவீதம் கமிஷன் டி.கே.சிவக்குமாருக்கு செல்ககிறது.
டி.கே.சிவக்குமாருக்கு பதிலாக மஞ்சுநாத் கவுடா, ஒப்பந்ததாரர்களிடம் இருந்து கமிஷனை பெற்றுள்ளார். ஒப்பந்ததாரர்களுக்கு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கிய விவகாரத்தில் டி.கே.சிவக்குமாருக்கு உதவியாக மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் இருந்துள்ளார். இந்த 15 சதவீத கமிஷன் விவகாரம் குறித்து சட்டப்படி விசாரணை நடத்தி டி.கே.சிவக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு முனிரத்னா கூறியுள்ளார்.