
ஜெய்ப்பூர்,
18-வது ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் அடித்துள்ளது. பெங்களூரு தரப்பில் ஹேசல்வுட், குருனால் பாண்ட்யா, யாஷ் தயாள் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணி 17.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 175 ரன்கள் அடித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பில் சால்ட் 65 ரன்களும், விராட் கோலி 62 ரன்களும், படிக்கல் 40 ரன்களும் அடித்தனர். ராஜஸ்தான் தரப்பில் குமார் கார்த்திகேயா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
இந்த ஆட்டத்தில் விராட் கோலி அடித்த அரைசதம் டி20 கிரிக்கெட்டில் அவரது 100-வது அரைசதமாக பதிவானது. இதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டிய 2-வது வீரர் என்ற வரலாற்று சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
இந்த பட்டியலில் டேவிட் வார்னர் 108 அரைசதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.