டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

5 hours ago 2

திண்டுக்கல்,

9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் முதல் மூன்று கட்ட லீக் போட்டிகள் கோவை, சேலம், நெல்லையில் நடந்து முடிந்துள்ளது. இதுவரை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (12 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (8 புள்ளி), நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் (8 புள்ளி) ஆகிய அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இரண்டு முறை சாம்பியனான கோவை கிங்ஸ் வெளியேறி விட்டது. மீதமுள்ள ஒரு 'பிளே-ஆப்' இடத்துக்கு 4 அணிகள் இடையே போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் கடைசி சுற்று போட்டிகள் திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கின்றன. இதன்படி இன்று நடக்கும் 25-வது லீக் போட்டியில் பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, சதுர்வேத் தலைமையிலான மதுரை பாந்தர்சை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து மதுரை அணி முதலாவதாக பேட்டிங் செய்ய இருந்தது. இந்த நிலையில், போட்டி நடைபெறும் திண்டுக்கல் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் திடீரென மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் தாமதாக போட்டி தொடங்கப்பட்டது. தாமதம் காரணமாக ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை.

தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அதீக் அர் ரகுமான் 41 ரன்களும், முருகன் அஸ்வின் 38 ரன்களும் எடுத்தனர். கேப்டன் சதுர்வேத் 31 ரன்களில் சிலம்பரசன் பந்துவீச்சில் போல்ட் ஆனார்.

சேப்பாக் அணியை பொறுத்தவரை விஜய்சங்கர் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுதவிர சிலம்பரசன் 2 விக்கெட்டுகளும், ரோகித் மற்றும் அபிஷேக் தன்வர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 157 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சேப்பாக் அணி விளையாடியது.

அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆஷிக் கலீல் ரகுமார் 22 ரன்களும், மோகித் ஹரிஹரன் 17 ரன்களும் எடுத்தனர். ஆட்டத்தின் 10-வது ஓவரின்போது மீண்டும் மழை குறுக்கிட்டதால், போட்டி சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து மழை நின்ற பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது டி.எல்.எஸ். முறைப்படி ஆட்டம் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டு சேப்பாக் அணிக்கு 114 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனால் சேப்பாக் அணி 28 பந்துகளில் 43 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இருந்தது.

கேப்டன் பாபா அபராஜித் 20 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அபாரமாக விளையாடிய விஜய் சங்கர் 28 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியாக 12.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு சேப்பாக் அணி 114 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் மதுரை பாந்தர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் அணி வெற்றி பெற்றது. மதுரை அணியை பொறுத்தவரை ஆயுஷ் 2 விக்கெட்டுகளும், முருகன் அஸ்வின் மற்றும் சூர்யா ஆனந்த் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Read Entire Article