
சென்னை ,
திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளரும், எம்.பியுமான தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,
மருதமலை திரைப்படத்தில் கைதியை தப்பவிட்ட வடிவேலுவை பார்த்து அர்ஜுன், "என்னென்னமோ பேசுவியே இப்ப பேசுடா... எதாவது பேசுடா" என்ற காமெடிதான் இன்றைக்கு நினைவுக்கு வருகிறது. எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து சொல்லி வரும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்திருப்பதை பற்றி ஏன் பேசாமல் இருக்கிறார்? டெல்லி எஜமான் கோபித்து கொள்வார் என்ற பயமா? அமலாக்கத்துறை , தன் வீடு தேடி வந்து விடும் என்ற அச்சமா? "அமலாக்கத்துறை சோதனை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்டாலின் மவுனமாக இருப்பது ஏன்'' எனக் கடந்த 17-ம் தேதி வீராவேசமாகக் கேட்ட சூராதி சூரர் யார்? அந்த சூனா பானாவைக் கண்டா வரச் சொல்லுங்க…கையோடு கூட்டி வாருங்க.
பொய்களையும் அவதூறுகளையும் வைத்தே அரசியல் செய்யும் பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவைக் கண்டு, வெட்கித் தலைகுனிய வேண்டும்! அதிமுகவை பாஜகவின் கிளைக் கழகமாக மாற்றி, கீழ்த்தரமான அரசியல் செய்து வரும் பழனிசாமியின் அருவருக்கத்தக்கப் பித்தலாட்ட அரசியல் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் கிழித்தெறியப்பட்டிருக்கிறது. பழனிசாமி பதில் சொல்லுவாரா... பம்மி கிடப்பாரா?. என தெரிவித்துள்ளார் .